செம்மணி புதைகுழி, ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: சர்வதேச விசாரணை வேண்டும் - சாணக்கியன்


செம்மணி மற்றும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் போன்றவற்றுக்கு சர்வதேச விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும்  இல்லாவிடின் இதற்கான நீதி கிடைக்காது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (09) நடைபெற்ற ஒத்திவைக்கும் பிரேரணையின் போதே இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும்  கருத்து தெரிவிக்கையில்,

சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தேன் அதில் சர்ச்சைக்குரிய விடையங்கள் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்படும் போது அவர்களின் நாடாளுமன்ற சிறப்புரிமைக்கும் அவர்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் வழங்கவேண்டும்.

செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதி மறுக்கப்பட்டது என்பது நல்லிணக்கத்திற்கு பாதகமான ஒரு விடயம். பொறுப்புக்கூறல் என்பது நல்லிணக்கம் உருவாக முக்கிய விடயமாக உள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 300 இற்கும் அதிகமானோர் கொல்லப் பட்டுள்ளனர். 1998/99 காலப்பகுதியில் சோமரட்ன ராஜபக்ஷ எனும் நபர் மொழிந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் செம்மணி பிரதேசத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 15 மனித எச்சங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இவ் எச்சங்கள் ஸ்கொட்லாந்தில் கிளஸ்கோவில் உள்ளதாக அறிகின்றோம். ஏன் இவற்றை இலங்கை அரசாங்கம் ஆய்வு செய்யவில்லை? DNA பரிசோதனை இலங்கை அரசாங்கத்திற்கு மேற்கொள்ள வசதிகள் இல்லாத நிலையில் ஏன் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தின் உதவியை நாட தயங்குகின்றது?

அரசாங்கம் செய்ய குற்றங்களை அரசாங்கம் விசாரிப்பதில் சிக்கல்கள் உள்ளன என ஜனாதிபதி கூறியுள்ளார். இதானாலேயே நாங்கள் சர்வதேச விசாரணை ஒன்றினை எதிர்பார்க்கின்றோம். அரசாங்கம் ஊழல் ஒழிப்பிற்கு விசேட அலுவலகம் ஒன்றினை உருவாக்க யோசிப்பது போல் ஏன் மனித உரிமை மீறல்களை விசாரிக்க அலுவலகம் அமைக்கவில்லை? ஆரையம்பதியில் கொல்லப்பட்ட விஜிதா, மட்டக்களப்பில் கொல்லப்பட்ட ரிபாயா, பிறேமினி, மனித புதைகுழி உள்ள கொக்குத்தொடுவாய், மாத்தளை, செம்மணி, இன்னும் அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்படாத பிள்ளையானின் தீவுச்சேனை ஆகியவற்றின் மீது ஏன் இன்னும் விசாரணை மேற்கொள்ளவில்லை?

சட்டத்தில் இணையவழி (Online) மூலமாக வாக்குமூலம் பதிவு செய்வதற்கு இயலுமாக இருப்பினும் தற்போது பிள்ளையானுக்கு எதிராக சாட்சி அளிக்க தயாராக உள்ள அசாத் மௌலானாவின் வாக்குமூலமானது பதிவு செய்யப்படவில்லை. அசாத் மௌலானா தனது வாக்குமூலத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு  வழங்கிய போதிலும் அவ் அறிக்கையினை இலங்கை அரசாங்கம் இன்றளவிலும் கேட்டுப் பெறவில்லை.

2004ம் ஆண்டிலிருந்து இந் நாட்டில் இஸ்லாமிய அடிப்படை வாதத்தினை உருவாக்கியது இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே. கலில் (ஓட்டமாவடி) மற்றும் பாயிஸ் (காத்தான்குடி) எனும் அழைக்கப்படும் இருவர் தற்போது வரை இயங்கிக் கொண்டிருக்கின்றனர். கலில் என்பவர் தமிழரசுக் கட்ச்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவின் கொலை வழக்கில் பிள்ளையானுடன் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட ஒருவர். இலங்கை அரசாங்கம் இன்று வரை இவர்களிடம் எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளவில்லை.

நியாஸ் எனும் ஒருவர் சாய்ந்தமருதில் சுட்டுக்கொல்லப்பட்டவர். இவர் நிந்தவூர் “Safe House” இல் இருந்ததாக இராணுவ புலனாய்வுத் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்ற போதும் அவரை பிடிக்க முடியவில்லை. ஆனால் இவர் ஒரு முக்கிய சாட்சியாக கருதப்படக்கூடிய ஒருவர். ஆனால் இச் சாட்சியை மூடி மறைத்துள்ளனர்.

சாரா எனப்படும் புலஸ்தினியினுடைய 3வது DNA அறிக்கையின் பிற்பாடே அவர் இறந்து விட்டார் என மொழியப்பட்டது. இரு தடவைகளும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் பிரகாரம் அவரை ஏன் இனங்காண முடியவில்லை? இவருடைய தேசிய அடையாள அட்டை அம்பாறை நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சாராவினுடைய அனைத்தும் தீக்கிரையாகி விட்டன என்றால் எவ்வாறு தேசிய அடையாள அட்டை மாத்திரம் கைப்பற்றப்பட்டது?

இஸ்லாமிய அடிப்படை வாதத்தை வைத்துக்கொண்டு அரசியல் இலாபம் தேட நினைக்கும் கட்சிகள் உள்ளன. “மினுவாங்கொட போன்ற இடங்களில் இஸ்லாமியர்களின் கடைகளை எரித்ததற்கு பின்புலத்தில் சரத் வீரசேகர என்பவரே உள்ளார்.” என மைத்திரிபால சிறிசேன அவர்களின் குரல் பதிவும் உள்ளது. ஆனால் ஏன் இதுவரை காலமும் சரத் வீரசேகரவிடம் எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளவில்லை?

ரொஹான் குணரட்ன என அழைக்கப்படும் விரிவுரையாளர் என்பவர் சிங்கப்பூரில் உள்ள தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தில் Security Defence பற்றிய விரிவுரையாளர். ஐஎஸ் தீவிரவாத அமைப்பே இக் குற்றங்களுக்கு காரணம் என இவர் இரு மாதங்களுக்கு முன்பே கூறியுள்ளார். அரசாங்க அமைச்சர் பிள்ளையானே இக் குற்றங்களுக்கு பின்னணி சூத்திரதாரி எனக் கூறுகின்றார். ரொஹான் குணரட்ன என்பவர் பொய்யான வாக்குறுதிகளை மொழிதமைக்காக கனடாவில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆகவே இது தொடர்பாகவும் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும். 

2008ம் ஆண்டு காலப்பகுதியில் ஏறாவூர் பகுதியை சேர்ந்த முஹமட் ரசாக் என்பவரது துப்பாக்கி தொலைந்தது. இத் துப்பாக்கி நுவரெலியாவில் உள்ள ரசாக் என்பவரிடம் இருப்பதாக அவர் கைது செய்யப்பட்டார். இவர் “Islamic Centre” எனும் அமைப்பில் உள்ளார். இத் துப்பாக்கி சபீக் எனப்படுபவரிடமிருந்து ரசாக் என்பவருக்கு விற்கப்பட்டதாகவே தகவல். இத் துப்பாக்கியினையே ரில்வான் சாய்ந்தமருதில் ஏற்பட்ட குண்டு வெடிப்பின் போது வைத்திருந்தவர் என தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஏன் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.

No comments