வெலிக்கடை சிறைப்படுகொலை தொடர்பில் விசாரணை வேண்டும்


நாட்டில் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெலிக்கடை சிறையில் வைத்து படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பிலும் அரசு விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும். அவர்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகள் உள்ள இடங்களையும் அரசு கண்டுபிடிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். 

நாடாளுமன்றில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஜூலை மாதம் வெலிக்கடை சிறையில் எம்மவர்கள் படுகொலை செய்யப்பட்ட மாதம்.

தமிழினத்தின் விடுதலைக்காக, உரிமைக்காக முதலில் ஆயுதம் எடுத்து போராடிய தலைவர் தங்கதுரை, குட்டிமணி போன்றோர் பருத்தித்துறை மணற்காட்டு கடற்கரையில் 1981 சித்திரை மாதம் 05 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டார்கள்.

1983 ஜூலை மாதம் 25ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதிகவரையில் சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் உள்ளிட்ட என 53 பேர் கொடூரமாக சிங்கள காடையர்களினால் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இந்தப்படுகொலைக்கு பொலிஸ் மற்றும் சிறை அதிகாரிகள் எல்லோரும் உடந்தையாக இருந்தனர் . 

குட்டிமணி உட்பட பலரின் கண்கள் பிடுங்கப்பட்டன.இரண்டு நாட்களாக இந்த படுகொலைகள் இடம்பெற்ற சூழலில், தலைவர் தங்கதுரை, தளபதி குட்டிமணி, ஜெகன்,நடேசதாசன், தேவன்,சிவபாதம் , ஸ்ரீகுமார், மரியாம்பிள்ளை, குமார், குமாரகுலசிங்கம் மற்றும் வைத்தியர் ராஜசுந்தரம் உட்பட 53 பேர் படுகொலை செய்யப்பட்டனர் .

எனவே, 1983 ஆம் ஆண்டு இதே மாதம் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பிலும் அரசு விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும். அவர்கள் புதைக்கப்பட்ட புதைக்குழி எங்கேயுள்ளதெனவும் அரசு கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.

No comments