ஜநா ஆணையர் சந்திப்புக்களில்!



யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட்டுள்ளார். இலங்கை விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்திருந்த அவர் செம்மணிக்கு பயணித்ததுடன் அணையா விளக்கு போராட்டகளத்தில் மக்களை சந்தித்திருந்தார்.

முன்னதாக கொலை செய்யப்பட்ட மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு மௌன அஞ்சலியையும் மலரஞ்சலியையும் ஜநா மனித உரிமை ஆணையாளர் செலுத்தியிருந்தார்.

பின்னராக அருகாக அமைந்துள்ள சிந்துபாத்தி செம்மணி மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியை பார்வையிட்ட அவர் அதனைத் தொடர்ந்து நல்லூர் கோவில் வீதியில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் சிவில் சமூக பிரதிநிதிகளுடன் சந்திப்பில் ஈடுபட்டார்.

அவர் பயணித்த வீதியெங்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் உயர்பாதுகாப்பு வலய காணி அபகரிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் என பல தரப்பினரும் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments