யாழில் கடை உரிமையாளர் மீது தாக்குதல்


அச்சுவேலியில் கடை உரிமையாளர் ஒருவர் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக உணவகமொன்றினை நடாத்திவரும் சின்னையா ஆலாலசுந்தரம் (வயது 54)என்பவரே காயமடைந்துள்ளார்.

அச்சுவேலி வைத்தியசாலை வீதியூடாக தனது கடையினைத் திறப்பதற்கு இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை சென்ற வேளை குறித்த வீதியில் கார் ஒன்றில் காத்திருந்தவர்கள் இடையில் வழிமறித்து பொல்லுகளால் கடுமையாக தலை, கை என்பவற்றில் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

தாக்குதல் நடாத்திய இருவர் தம்மை அடையாளம் காணாதவாறு முகத்தை துணியால் கட்டி மறைத்திருந்ததாக தெரியவருகிறது.

காயமடைந்தவர் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிசார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments