மான்,சங்கு களமிறங்கின: வீடு காத்திருக்கின்றது!

நாடாளுமன்ற தேர்தலிற்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 11ம் திகதியினுள் தாக்கல் செய்ய கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியினர் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்று தாக்கல் செய்துள்ளனர்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனை முதன்மை வேட்பாளராக குறிப்பிட்டு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியினர் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.தர்மலிங்கம் சித்தார்த்தன், ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன், குருசுவாமி சுரேந்திரன், கனகலிங்கம் சிவாஜிலிங்கம், பாலச்சந்திரன் கஜதீபன், சிங்கபாகு சிவகுமார், சசிகலா ரவிராஜ், சிவநாதன் ரவீந்திரா, ஜெயரத்தினம் ஜெனார்த்தனன் ஆகியோர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் போட்டியிடவுள்ளனர்.

அதேவேளை நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணிக்குள் வி. மணிவண்ணனுக்கு முன்னுரிமையளிப்பதாகத் தெரிவித்து கட்சியின் மூத்தவர்கள் பலர் அதிருப்தியடைந்து, கட்சி செயற்பாட்டிலிருந்து ஒதுங்கியுள்ளனர். அதனை  தொடர்ந்து வி.மணிவண்ணன் தரப்பே வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது.

கட்சியின் வேட்பாளர் பட்டியலில் வி.மணிவண்ணன், வ.பார்த்தீபன், செல்டன் , சிற்பரன், ஜெனிட்டன் , உமாகரன் இராசையா, மிதிலைச்செல்வி (முன்னாள் தமிழரசுக் கட்சி மகளிர் அணி உறுப்பினர்), கோகிலவாணி (கிளிநொச்சி), உள்ளிட்டவர்கள்; போட்டியிடுகின்றனர்.


No comments