நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுலில்


நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இன்று (21) மாலை 4 மணியளவில் வாக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொலிஸ் உத்தியோகத்தர்களும், கலகத் தடுப்புப் பிரிவு உத்தியோகத்தர்களும் தேவைக்கேற்ப கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் வீதித் தடைகள் அமுலில் உள்ளதாலும், முடிவுகள் வெளியாகும் வரை பாதுகாப்புத் திட்டம் நாட்டில் முழுமையாகச் அமுல்ப்படுத்தப்படும் என  அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் மற்றும் ஒரு வார காலத்திற்குள் எந்தவொரு நபரும் வாகனங்களிலோ அல்லது நடை பேரணியாகவே பேரணி செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும், சகல மக்களும் இந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

அதேபோல், சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்ற வகையில்,  நாட்டின் சட்டம் ஒழுங்கை அமைதியான முறையில் பேணுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க இலங்கை பொலிஸாருக்கு ஆதரவளிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

அமைதியை சீர்குலைக்கும் செயல்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

119

118

107 (வடக்கு, கிழக்கு )

011 202 7149

011 201 3243

111 239 9104 - (தொலைநகல் எண்)

No comments