தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக பிரதேசவாதத்தை கையில் எடுத்துள்ளார்கள்
கிழக்கு மாகாணத்தில் பிரதேச வாதத்தை முன்னிறுத்தி தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்கள். இவ்வாறு அவர்கள் பேசி கிழக்கு மாகாணத்தை சிங்களவர்களிடம் பறிகொடுக்க முயல்கின்றார்கள். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என ஈ . பி . ஆர் . எல் . எப் . கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில். இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆதரவாக டக்ளஸ் தேவானந்தா , மட்டக்களப்பில் இருந்து பிள்ளையான் வியாழேந்திரன் போன்றோர் பேசி வருகின்றனர்.
எனது கேள்வி கிழக்கில் இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் இருந்தீர்கள் உங்களால் மேய்ச்சல் தரை பிரச்னையை தீர்க்க முடியவில்லை இப்ப கூட நீங்கள் அது தொடர்பில் பேச கூட விரும்பவில்லை. குறைந்த பட்சம் கன்னியா வென்னீர் ஊற்றை காப்பாற்ற முடிந்ததா ? கல்முனை பிரதேச சபையை தர முயர்த்த முடிந்ததா ?
அதேபோன்றே வடக்கில் கடற்தொழில் அமைச்சராக இருந்தும் இன்று வரை இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த முடிந்ததா? எங்களுடைய மீனவர்களுக்கு என்ன செய்தீர்கள் ? கடற்தொழில் அமைச்சராக இருந்து எமது மீனவர்களின் பிரச்னையை தீர்க்க முடியவில்லை.
ஆனால் இப்போதும் மீண்டும் ரணில் ஜனாதிபதியாக வர வேண்டும் என கோருகின்றார்கள். இது அவர்களின் சட்டை பையை நிரப்பும் செயல்.
பிரதேச வாதங்களை முன்னிறுத்தி கிழக்கில் பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்களுக்கு வடக்கு கிழக்கு இணைப்பை பற்றி கூட அக்கறை இல்லை. பறிபோகும் கிழக்கை மீட்க இவர்கள் என்ன செய்தார்கள். தற்போதும் பிரதேச வாதங்களை பேசி கிழக்கை பறிகொடுக்க முயல்கின்றனர். இதனை கிழக்கு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே இலங்கையில் வாழும் அத்தனை தமிழ் மக்களும் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்
Post a Comment