விராஜ் மென்டிஸிக்கு புலம்பெயர் தமிழர்கள் அஞ்சலி!

ஜேர்மனியின் பிறீமன் நகரில் நடந்த அவரது இறுதி நிகழ்வுகளில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இருந்தும் திரண்டு வந்த புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொண்டு அவருக்குத் தங்கள் இறுதி அஞ்சலியைச் செலுத்தியிருக்கிறார்கள்.
இங்கிலாந்து, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து நெதர்லாந்து, நோர்வே போன்ற நாடுகளில் இருந்துவந்த அரசியல் செயற்பாட்டாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் உட்படப் பெரும் எண்ணிக்கையானவர்கள் மென்டிஸின் உடலுக்குத் தங்கள் இறுதி மரியாதைச் செலுத்தினர்.
ஈழத் தமிழர்களது உரிமைகளுக்கான சர்வதேச ஆதரவைத் திரட்டுவதில் அரும்பங்காற்றிய அவரது வாழ்வைப்பலரும் நினைவுகூர்ந்தனர்.
இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்தது என்பதை இலங்கைக்கு வெளியே முதன்முதலாக நிறுவிய பிறீமன் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் இயங்குசக்தியாக இருந்து அதன் செயற்பாடுகளை நெறிப்படுத்தியவர் விராஜ் மென்டிஸ் ஆவார்.
கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தனது துணைவியான கரேனுடன்(Karen) அங்கேயே வாழ்ந்து வந்த அவர் தனது 68 ஆவது வயதில் கடந்த 16 ஆம் திகதி காலமானார்.
Post a Comment