ஜனாதிபதி வேட்பாளர் எவருக்கும் ஆதரவில்லை!
காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளிற்காக கடந்த 15 வருடங்களாக வீதியில் இறங்கி போராடி வருகின்ற நிலையில் இதுவரை எந்த ஜனாதிபதியும் நீதியை பெற்றுத் தரவில்லை.
அவ்வகையில் இம்முறை இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் யார் ஜனாதிபதியாக வந்தாலும் நியாயம் கிடைக்குமென்ற நம்பிக்கையில்லையென வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ்;.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்கிழமை மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையாட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை 30 ஆம் திகதி வடக்கு, கிழக்கில் 8 மாவட்டங்களில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இணைந்து இரு மாவட்டங்களில் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்.
வடமாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களும் இணைந்து யாழ். மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்தில் உள்ள 3 மாவட்டங்களும் இணைந்து திருகோணமலை மாவட்டத்திலும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம். போராட்டத்திற்கு வடக்கு கிழக்கில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பூரண ஆதரவை வழங்க வேண்டும்.
நாங்கள் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக வீதியில் இருந்து போராடி வருகின்றோம். எனினும் எங்களுக்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இலங்கை அரசாங்கத்திடம் இருந்தும் சரி சர்வதேசத்திடம் இருந்தும் சரி எவ்வித நியாயமும் கிடைக்கவில்லை.
ஜனாதிபதி தேர்தலில் எவர் ஜனாதிபதியாக வந்தாலும் எங்களுக்கு எந்த பலனும் இல்லை. நாங்கள் எவரையும் ஜனாதிபதியாக ஆதரிக்கவில்லை. எப்படியாக இருந்தாலும் ஜனாதிபதியாக சிங்கள ஆட்சியாளர்கள் வரப் போகின்றனர். அவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் என நாங்கள் நம்பவில்லை. இதனாலேயே நாங்கள் சர்வதேசத்தை நம்பி நிற்கின்றோமெனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் தெரிவித்துள்ளன.
Post a Comment