மரணச்சான்றிதழுடன் அலுவல் முடிக்க முயற்சி!



வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு மரண சான்றிதழை வழங்கி வாய்மூடி வைக்க இலங்கை அரசு தொடர்ந்து முற்பட்டுள்ளது.

இந்நிலையில் வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்றும் (09) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கொட்டகைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இலங்கை அரசின் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தின் பெயர்ப்பலகை பொறிக்கப்பட்ட பதாகை ஒன்றினை காட்சிப்படுத்தியதோடு அதற்கு அழுகிய பொருட்களால் எறிந்து தமது எதிர்ப்பினையும் தெரிவித்திருந்திருந்தனர்.

அத்துடன் ”நாங்கள் இரண்டு இலட்சம் லஞ்சம் கேட்கவில்லை எங்கள் குழந்தைகள் எங்கிருக்கின்றார்கள் என்பதைக் கூறுங்கள்,  இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதியை கேட்கிறோம்” என்ற வாசகங்களையும் பதாகையில் குறிப்பிட்டிருந்தனர்.

இதனிடையே காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தில் இதுவரை 14988 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக காணாமல் போனோர் தொடர்பான அலுவலக சபை உறுப்பினர் யோகராஜா தெரிவித்துள்ளார்.

வவுனியா பிரதேச செயலகத்தில் (இன்று (09) இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டுள்ளோர் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்யும் செயற்பாடு இடம்பெற்றது.

கிடைத்துள்ள முறைப்பாட்டினில்; முழுமையான விசாரணைகளாக இறுதிக் கட்டத்தை நெருங்கியவையாக 5791 முறைப்பாடுகளுக்கான விசாரணைகளை பூர்த்தி செய்துள்ளதாகவும் யோகராசா தெரிவித்துள்ளார்.


No comments