முச்சக்கர வண்டியில் சடலம் மீட்பு: இருவர் கைது!


கொழும்பு 07, வார்ட் பிளேஸ் பகுதியில் முச்சக்கரவண்டிக்குள் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

நேற்று (26) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் குழுவினர் கிராண்ட்பாஸ், சமகி மாவத்தை பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதில் சந்தேகநபர் ஒருவரிடம் இருந்து 30.2 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவர்கள், 35, 48 வயதுடைய கோணவில மற்றும் கிராண்ட்பாஸ் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

கடந்த 23 ஆம் திகதி அதிகாலை, கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டியொன்றுக்குள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமொன்று காணப்படுவதாக 119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் காவல்துறையினரால் குறித்த சடலம் மீட்கப்பட்டது.

தேசிய பல் வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த முச்சக்கரவண்டிக்குள் இவ்வாறு சடலம் மீட்கப்பட்டிருந்தது.

உயிரிழந்தவர் 33 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

No comments