தமிழ்ப் பொதுவேட்பாளரை அயல்நாடு நாடி பிடிக்கிறது! இறக்குமதிகள் தந்த ஏமாற்றம் ''வாரிசு" அரசியலை நாடுகிறது! பனங்காட்டான்


அரசியலில் எதனையும் நடக்காது என்று சொல்ல முடியாது. முனைப்புப் பெற்றிருக்கும் தமிழ்ப் பொதுவேட்பாளர் கருத்துருவாக்கம் இதிலொன்று. இது

போன்று அடுத்த சில மாதங்களில் இடம்பெறப்போகும் பொதுத்தேர்தலில் திருமலை மாவட்டத்தில் ''ஐயா''வின் வாரிசு ஒருவரை களமிறக்க ஏற்பாடாகி வருகிறது என்று காதோடு காதாக ஒரு தகவல். இறக்குமதிகளால் கிடைத்த ஏமாற்றமே இதற்கான முக்கிய காரணமாம்.

இப்பத்தியை எழுத ஆரம்பிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் வெவ்வேறு விடயங்களுக்காக நான்கு பேருடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதன்போது பெறப்பட்ட சில கருத்துகளின் தொகுப்பு இன்றைய பத்தி.

அந்த நால்வரில் ஒருவர் தமிழ் தேசிய அரசியலுடன் ஈடுபாடு கொண்டவர். இரண்டாமவர் நீண்டகால அனுபவ ஊடகர். மூன்றாமவர் தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயத்தில் அக்கறை கொண்ட சிவில் சமூக பங்காளி. அடுத்தவர் திருமலையைச் சேர்ந்த தமிழரசுக் கட்சியின் விசுவாசி. 

பொதுவேட்பாளர் விடயம் எவ்வாறு போகிறது என்று இவர்களில் ஒருவருடன் கேட்டபோது, இப்போது ஐந்து தமிழ்த் தேசிய கட்சிகளையும் இணைத்த கூட்டின் பிரதிநிதிகள் கொழும்பில் இந்தியத் தூதுவருடன் பேசிக் கொண்டிருக்கின்றனர் என்று சுருக்கமாகச் சொன்னார். இதில் வியப்படைய ஒன்றுமில்லை. அண்மைக் காலங்களில் வழக்கமாக நடைபெறும் சந்திப்புகளில் இதுவும் ஒன்று என எண்ணிக் கொண்டேன். 

இதுபற்றி மேலும் அறிய மற்றொருவருடன் பேசினேன். எவ்வாறாவது பொதுவேட்பாளரை இல்லாமற் செய்வதில் அயல்நாடு அக்கறை காட்டுகிறது என்று கூறினார். நான் அத்துடன் அவரை விடவிரும்பவில்லை. பொதுவேட்பாளர் விடயத்தில் அக்கறை கொண்டவரான அவரிடம் பல விடயங்கள் பொதிந்து கிடந்தன. பின்வரும் விடயங்களை அவர் ஆழமாக விபரித்தார். 

அனுரகுமார திசநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் வெல்வதை அயல்நாடு விரும்பவில்லை. அநுர வென்றுவிட்டால் இலங்கை இன்னொரு மாலைதீவாக போய்விடுமென்று அவர்கள் அஞ்சுகின்றனர். அவர்கள் மட்டுமன்றி உலகப் பொலிஸ்காரரான நாடும் இதே போக்கில்தான் இருக்கிறது. இதுதான் இப்பவுள்ள முக்கிய விடயம் என்பதோடு அவர் நிறுத்தவில்லை. 

'ரணில் வென்றாலென்ன, சஜித் வென்றாலென்ன அயல்நாட்டுக்குப் பிரச்சனை இல்லை. இவ்விருவரில் எவர் வென்றாலும் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து அவரை வளைத்து விடலாமென அது திடமாக நம்புகிறது. ஆனால், ரணில் வெல்வதிலேயே கூடுதலாக விருப்பம். அப்படியென்றால் தமிழரின் வாக்குகள் ரணிலுக்குத் தேவை. அந்த நிலையில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவர் போட்டியிட்டால் ரணிலுக்கு சாதகமாக அமையாது" எனக் கருதும் இந்தியா எவ்வகையிலாவது பொதுவேட்பாளரை தடுக்கவே முனையும் என்று தமிழ் சிவில் சமூக பிரமுகர் கூறி முடித்தார். 

ஆனால், ஊடக நண்பர் தெரிவித்த கருத்துகள் வித்தியாசமான பார்வையில் இருந்தது. இன்னும் ஓரிரு வாரங்களில் ஜனாதிபதி தேர்தலுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வரவேண்டும். அதற்கிடையில் தெற்கில் குசுகுசு சந்திப்புகள் ஆரம்பமாகிவிட்டன. ரணிலும் மகிந்தவும் பசிலும் சில நாட்களுக்கு முன்னர் சந்தித்துள்ளனர். இதுபற்றிய விபரங்கள் வெளிவரவில்லை. மகிந்தவின் பெரமுனவைச் சேர்ந்த எழுபதுக்கும் அதிகமானவர்கள் - சில அமைச்சர்கள் உட்பட ரணில் பக்கம் நிற்கிறார்கள். இவ்வேளையில், பெரமுனவை பிளவுபடாது  காப்பாற்ற வேண்டுமென்றால் ஒட்டுமொத்தமாக ரணிலுக்கு ஆதரவளிப்பது தவிர்க்க முடியாதது. 

ஆனால், ரணிலுக்கு அதில் இஷ்டமில்லை. பெரமுன முழுமையாக தம்மை ஆதரிக்குமானால் சிறுபான்மை மக்களின் (தமிழர் மற்றும் முஸ்லிம்கள்) வாக்குகள் தமக்குக் கிடைக்காதென அஞ்சுகிறார். இந்த நெருக்கடியைத் தீர்க்க பெரமுன ஒருவரை வேட்பாளராக இறக்க வேண்டுமென விரும்புகிறார். அது, பெரும்பான்மையினரின் வாக்குகளுடன் சிறுபான்மையினரின் வாக்குகளைச் சேர்த்து தமக்கு வெற்றியைத் தரலாமென ரணில் கணிக்கிறார் என்று விளக்கிய ஊடக நண்பர், களநிலைவரம் நாளொரு வண்ணம் ஏறியிறங்கிச் செல்வதால் எதிர்பாராததை எதிர்பார்க்கலாமென்று சொல்லி முடித்தார். 

ரணில் நிச்சயம் போட்டியிடுவாரா என்ற ஒரு கேள்வியை, அதற்கான பதிலை முற்கூட்டியே தெரிந்து கொண்டும் அவரிடம் கேட்டேன். ஷதேனில் கை வைத்தவர் அதனை சுவைக்காமல் விடமாட்டார்| என்ற சிங்களப் பழமொழியை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் கூறியதை எனது கேள்விக்கான பதிலாக அவர் நினைவூட்டினார். 

இவ்வாறு உரையாடிக் கொண்டிருக்கையில், கொழும்பில் இந்தியத் தூதுவர் சந்தோ~; ஜா தமிழ் தேசிய பிரமுகர்களுடன் நடத்தி முடித்த சந்திப்பின் முக்கிய விடயங்கள் கசியத் தொடங்கியது. இந்திய அரசு தமிழர் பகுதியில் மேற்கொள்ளும் - மேற்கொள்ள விரும்பும் அபிவிருத்திகள் பற்றி இச்சந்திப்பில் அலசப்பட்டதாயினும் தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயத்தில் தமிழர் தரப்பு எவ்வளவு தீவிரமாக இருக்கின்றனர் என்பதை அறிவதில் இந்தியத் தூதுவர் அதிக நாட்டம்  காட்டியுள்ளார். 

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி என்ற பெயர் கொண்ட கூட்டின் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகள் இச்சந்திப்பில் பங்குபற்றியிருந்தனர். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக சொல்லப்படும் சிங்கள சமூகத்தின் வேட்பாளர்கள் எவரும் தமிழர் பிரச்சனைக்கு உறுதியான தீர்வை அறிவிக்காததால் தமிழ்ப் பொதுவேட்பாளர் போட்டியிடுவது அவசியம் என்பதை தமிழர் தரப்பினர் இங்கு வலியுறுத்திக் கூறினர். (சில நாட்களுக்கு முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் நடைபெற்ற சந்திப்பில் புளொட் தலைவர் சித்தார்த்தன் தனிப்பட்ட முறையில் தமிழ்ப் பொதுவேட்பாளர் பற்றி என்ன கருதுகிறீர்கள் என்று வினவியபோது, அது நீங்கள் எடுக்க வேண்டிய முடிவு என்று அவர் கூறியதை இவ்வேளையில் நினைவிற் கொள்வது முக்கியமானது). 

சம்பந்தன் தலைமையில் சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் இயங்கிய தமிழரசுக் கட்சி தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயத்தில் இரண்டு அணிகளாக இருப்பதையும் இவர்கள் இங்கே எடுத்துக்கூற மறக்கவில்லை. தமிழரசின் தலைவராக அண்மையில் தெரிவான சிவஞானம் சிறீதரன் பொதுவேட்பாளரை ஆதரிக்க,  தலைவர் போட்டியில் தோல்விகண்ட சுமந்திரன் பொதுவேட்பாளரை எதிர்த்து வருவது பகிரங்கமானது. பொதுவேட்பாளரை தோற்கடிப்பேன் என்று சுமந்திரன் சூளுரைத்து வருவதை இந்தியத் தூதுவர் அறியாதிருக்க மாட்டார். 

தமிழர்களிடையே நிலவி வரும் ஒற்றுமையின்மையை முன்னிறுத்தி தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை கண்டுபிடிப்பது இயலாத காரியம் என்று ரணில் விக்கிரமசிங்க கூறியதும், எவ்வேளையிலும் பொதுவேட்பாளரை எதிர்த்தே நிற்பேன் என்று சுமந்திரன் முழங்கிவருவதும் ஒருபுறத்தே நடைபெற, மறுபுறத்தில் பொதுவேட்பாளர் விடயத்தை வெற்றிகரமாக்கும் முயற்சியில் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் தீவிரமாக ஈடுபட வேண்டுமென்ற வேண்டுகோள் பரவலாக வருகிறது. 

இதற்கிடையில் இன்னுமொரு போட்டியும் ஆரம்பமாகியுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவராகவிருந்த சம்பந்தன் மறைவையடுத்து இவ்விடத்துக்கு யாரை நியமிப்பது என்பதுவே இந்தப் போட்டி. செயற்பாட்டில் கூட்டமைப்பு பிளவுபட்டு தமிழரசுக் கட்சி தனியாகவும், மற்றையவை இன்னொரு அணியாக இயங்கினாலும், நாடாளுமன்ற விவகாரங்கபை; பொறுத்தளவில் இவர்கள் அனைவரதும் தேர்தல் சின்னம் வீடு ஆகவும், நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்கும் நேரம் ஒதுக்குவதில் கூட்டமைப்பாகவும் இருப்பதால், திருமண பந்தத்தில் பிரிந்திருக்கும் கணவனும் மனைவியும் ஒரே வீட்டில் வாழுவதைப் போன்ற நிலையில் இவர்கள் உள்ளனர். 

இந்தத் தொங்குநிலைக் காலத்தில் இதற்கான நாடாளுமன்றக் குழுத்தலைவர் பதவி காலியானது பெரும் சோதனை. இவர்களுள் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தலைமைப் பதவியை ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கோருகிறார். புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தமது ஆதரவை இவருக்கு வழங்கியுள்ளார். கூட்டமைப்பின் பத்து எம்.பிக்களில் நால்வர் அடைக்கலநாதன் பக்கம். மிகுதி ஆறும் தமிழரசுக் கட்சியினர். எவ்வாறாவது இப்பதவியைக் கைப்பற்ற சுமந்திரன் ஒற்றைக் காலில் நிற்பதை மூன்று கட்சியினரும் அறிவர். 

ஜனாதிபதித் தேர்தல் தமிழ்ப் பொதுவேட்பாளர் தெரிவுக்கு முன்னர் இந்தப் போட்டி வந்துள்ளது. இப்போதுள்ள நாடாளுமன்றத்தின் ஆயுள், ஜனாதிபதித் தேர்தல் முடிந்தவுடன் முடிவடையப் போகிறது. சொற்பகால பதவிக்கு அற்பத்தனமாக போட்டியிட நிற்கும் தமிழ்த் தேசிய பிரமுகர்கள் தமிழருக்கான அரசியல் தீர்வுக்கு ஒன்றுபடுவார்களென எவ்வாறு நம்ப முடியும்?

இறுதியாக, திருமலை தமிழரசுக் கட்சி பிரமுகரின் உரையாடலை நோக்கலாம். சம்பந்தனின் இறுதிச் சடங்கு காட்சிகளையும், அவரது குடும்பத்தினர் சில விடயங்களில் இறுக்கமாக எடுத்த முடிவுகளையும் அவர் விபரித்தார். தமிழரசுக்  கட்சிக்குள் கொழும்பிலிருந்தும் கனடாவிலிருந்தும் இறக்கப்பட்ட இருவர் தற்போது எம்.பிக்களாக உள்ளனர். இவர்கள் இருவரையும் இறுதி நிகழ்வுகளில் எட்ட வைத்தே குடும்பத்தினர் காரியங்களை நிறைவேற்றியுள்ளனர். ஆனாலும் கொழும்பு இறக்குமதி அதனை வெளியில் காட்டிக் கொள்ளாது - நானும் நானும் என்பது போன்று முக்கிய பிரமுகர்களின் வருகையின்போது தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டாரென்பது பகிரங்கமானது என அவர் கூறினார். 

சம்பந்தனின் இடத்துக்கு எம்.பியாக நியமனமாகியுள்ள சண்முகம் குகதாசனை முற்றுமுழுதாகவே திருமலையில் இடம்பெற்ற இறுதிச் சடங்கில் குடும்பத்தினர் அகற்றி விட்டதாகவும், அவரை எவரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லையென்றும் அப்பிரமுகர் கூறியது உண்மை. இறுதிச்சடங்கின்போது ஆங்காங்கே குகதாசனின் முகத்தையே பார்க்க முடிந்தது. 

கட்சியின் வாரிசாக பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பிலிருந்து இறக்கப்பட்டவரும், திருமலைத் தொகுதியின் வாரிசாக கனடாவிலிருந்து இறக்கப்பட்டவரும் ஷஐயா| வின் காலை வாரி அவரை இயக்கமற்றவராகவும் காது கேட்காதவராகவும் பேசமுடியாதவராகவும் நையாண்டி பண்ணி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அவரை இறக்குவதற்கு முயன்றவர்கள் என்ற மனத்தாக்கம் திருமலை மக்கள் மத்தியில் மேலோங்கி நின்றதை இறுதிச் சடங்கின்போது காலம் ஒளிப்பதிவு செய்து வைத்துள்ளது. 

இவர்களின் துரோகத்துக்கான எதிரொலியாக சம்பந்தனின் பிள்ளைகள் மூவரில் ஒருவரை திருமலை மாவட்ட பொதுத் தேர்தலில் களமிறக்க இப்போது சில பிரமுகர்கள் செயற்பட்டு வருவதாக கட்சிப் பிரமுகர் காதோடு காதாகச் சொன்னது நிச்சயம் பொய்யாக இருக்காது. 

நடக்காதென்று நினைப்பவைகள் நடக்கும் நாட்களைக் காண நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டி வராது. ஜனாதிபதி தேர்தலின் பின்னர் - அநேகமாக அடுத்தடுத்த மாதங்களில் பொதுத்தேர்தல் வரப்போகிறது. 

No comments