நானே சாவகச்சேரி வைத்திய அத்தியட்சகர் ; வைத்தியர் அருச்சுனா
உத்தியோகபூர்வமான இடமாற்ற கடிதம் எனது கைக்கு கிடைக்காததால் , நானே தற்போதும் சாவகச்சேரி வைத்தியசாலை அத்தியட்சகர் என வைத்தியர் அருச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி வைத்தியசாலை அத்தியட்சகராக கடமையாற்றிய வைத்தியர் அருச்சுனா இராமநாதனுக்கு வடமாகாண சுகாதார திணைக்களம் கடந்த 08ஆம் திகதி இடமாற்ற கடிதம் வழங்க முயன்ற போது, அதனை கையில் பெற்றுக் கொள்ளாது, வைத்தியர் மருத்துவ விடுமுறை எடுத்து , வைத்தியசாலையில் இருந்து வெளியேறி இருந்தார்.
அதை அடுத்து புதிய வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் கே.ரஜீவ் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அருச்சுனா , இன்றைய தினம் திங்கட்கிழமை மீள சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வருகை தந்து , தானே வைத்தியசாலை அத்தியட்சகர் என கூறினார். அதனால் வைத்தியசாலையில் குழப்பமான நிலை காணப்பட்டு, பொலிஸார் வைத்தியசாலைக்கு வருகை தந்து பாதுகாப்பை பலப்படுத்தினார்
பின்னர் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை மத்திய சுகாதார அமைச்சின் குழுவொன்று யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளமையால் , அக்குழுவினர் வைத்திய அத்தியட்சகர் தொடர்பில் தீர்க்கமான முடிவை அறிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து , வைத்தியர் அருச்சுனா , வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்.
அதன் போது ஊடகங்களுக்கு வைத்தியர் அருச்சுனா கருத்து தெரிவிக்கும் போது,
ஒரு கிழமை விடுமுறையில் சென்று இருந்தேன் நேற்றுடன் என் விடுமுறை முடிவடைந்து இன்றைக்கு மீண்டும் வந்துள்ளேன். நான் தான் இப்பவும் வைத்தியசாலை அத்தியட்சகர். அந்த வகையில் இன்று வந்து நான் எனது ஒப்பத்தை பதிவேட்டில் வைத்துள்ளேன். கடிதங்கள் சிலது வந்திருந்தன.அத்தனையும் பொறுப்பேற்றன்.
எனது கடமைகளை இன்னொருவர் பொறுப்பேற்று பொறுப்புடன் கடமைகளை செய்தால் எனக்கு சந்தோசம். நான் ஓய்வாக இருப்பேன்.
நான் இங்கே வந்து யாருடைய கடமைக்கும் இடையூறு விளைவிக்கவோ , நோயாளிகளை தொந்தரவு செய்யவோ வரவில்லை. நான் வைத்தியசாலைக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது
சுகாதார அமைச்சை சார்ந்த குழுவினர் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளனர். அவர்கள் சில முடிவுகளை அறிவிப்பார்கள்.
இந்த போராட்டமானது என்னை சுற்றிய போராட்டம் இல்லை. நான் கருத்து தெரிவிப்பது தாபன விதிக்கோவை முறைப்படி தவறு , ஆனால் அரசியலமைப்பின் பிரகாரம் எனக்கு கருத்து தெரிவிக்கும் உரிமை உண்டு.
நான் தாபன விதிக்கோவையை மீறி கருத்து தெரிவித்தேன் என எனக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் , இங்கு பல வைத்தியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் என்னைப்பற்றி பலர் கருத்து தெரிவிக்கின்றனர். எனக்கு நடவடிக்கை எடுத்தால் , அவர்களுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள சுகாதார அமைச்சின் குழு எனக்கு உத்தியோகபூர்வமாக இடமாற்ற கடிதம் வழங்கினால் , நான் அதனை பெற்றுக்கொள்வேன். எனக்கு உத்தியோகபூர்வ கடிதம் கையளிக்கப்படாத வரையில் நானே சாவகச்சேரி வைத்தியசாலையின் அத்தியட்சகர் இந்த வைத்தியசாலைக்கு பலதை பெற்றுக்கொடுத்துள்ளேன்.
இப்ப பிற மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைக்கு என்னை வருமாறு அந்த மாவட்டங்களை சேர்ந்த பலர் அழைக்கின்றார்கள். அங்கு போயும் அவற்றை மேம்படுத்த உழைப்பேன். இப்படியாக இலங்கையில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கு என்னை ஒவ்வொரு ஒவ்வொரு மாதங்களுக்கு மாற்றினால் , நான் அவற்றை மேம்படுத்துவேன்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நீண்ட காலமாக இயங்காது இருந்த சத்திர சிகிச்சை கூடத்தை கடந்த 05ஆம் திகதி முதல் இயங்க வைக்க நடவடிக்கை எடுத்தேன். அதை குழம்பினார்கள். அதனால் இன்று வரை அதனை இயங்க வைக்க முடியாது உள்ளது.
நாங்க மக்களுக்கு வைத்தியம் செய்ய வந்தவர்கள். அதனை மனதில் நினைத்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது எண்ணம் என தெரிவித்தார்.
Post a Comment