தமிழரசு தீர்வு:ஆளுக்கொரு கதிரை!



எம்.ஏ.சுமந்திரனை நாடாளுமன்ற குழுவின் தலைவராகவும் தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவியை சிறீதரனிற்குமென சமரச பேச்சுக்கள் மீண்டும் தமிழரசில் ஆரம்பமாகியுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெயரில் நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவரை தெரிவுசெய்வதில் பல்வேறு நெருக்கடிகள் தோன்றியுள்ளன.

இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த இரா.சம்பந்தன் காலமானமையை அடுத்து இந்தப் பதவி வெற்றிடமாகியுள்ளது.

இந்தப் பதவிக்கு தம்மைத் தெரிவு செய்யும்படி கோரி ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த புதன்கிழமை தமிழரசு கட்சி சார்பில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவானவர்களின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

சித்தார்த்தனைத் தவிர ஏனையோர் இதன்போது பிரசன்னமாகி இருந்தனர். கூட்டத்தின் ஆரம்பத்தில் மேற்படி தலைமைப் பதவிக்குத் தன்னுடைய பெயரை செல்வம் அடைக்கலநாதன் தாமே பிரேரித்தார்.

செல்வம் தலைவராக இருப்பதில் ஆட்சேபனை ஏதுமில்லை. அவர் தலைவராக இருக்க, இதுவரை காலமும் இப்ப பணியை சம்பந்தன் சார்பில் ஆற்றி வந்த சுமந்திரனே அவற்றைத் தொடர்ந்து செய்யலாம்.

இருவரும் இணைந்து இந்தப் பணியை முன்னெடுக்க முடியும். ஆனால் தங்களுடைய ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியை கைவிட்டு வர முடியாது, அதன் பெயரிலேயே செயற்படுவோம் என்ற உறுதியான நிலைப்பாட்டை செல்வம் முன்னெடுப்பதால் அது சாத்தியமில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழரசு தலைவர் கதிரைக்கு நடக்கும் போட்டியை தீர்க்க எம்.ஏ.சுமந்திரனை நாடாளுமன்ற குழுவின் தலைவராகவும் தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவியை சிறீதரனிற்குமென சமரச பேச்சுக்கள் தொடங்கியுள்ளது.


No comments