தாயகம் திரும்புவர்களிற்கு பலாலி ஊடாக அனுமதியில்லை!



ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ரொபட் பாயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் நாளை தாயகம் திரும்பவுள்ள நிலையில் பலாலி விமான நிலையம் ஊடாக பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து அழைத்துவரப்படும் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை முருகன் சார்பில் வழக்காடிய சட்டத்தரணி புகழேந்தி உறுதிப்படுத்தியுள்ளார்.

மூவரும் நாடு திரும்பு வகையில், கடந்த வாரம் இலங்கை உயர் ஸ்தானிகராலயம் கடவுச்சீட்டு வழங்கியிருந்தது.

இந்நிலையில், குறித்த மூவரையும் இலங்கைக்கு அனுப்புவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் நாளை காலை நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட உள்ளனர்.

எனினும் பலாலி விமான நிலையம் ஊடாக பயணிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாகவே பயணிக்கவுள்ளனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகள் வரையில் சிறையில் இருந்த அனைவரும் 2022 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர்.

எனினும் சாந்தன் நோய்வாய்ப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி மாதம் சென்னை ராஜீவ்காந்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் உயிரிழந்தார்.


No comments