வெடுக்குநாறி மலையில் பதற்றம்:கைது-தாக்குதல்!
வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு 6 மணிக்கு மேல் யாரையும் தரித்து நிற்க வேண்டாம் எனவும் அவ்வாறு தரித்தால் கைது செய்ய நேரிடும் எனவும் இலங்கை காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் தொடர்ந்தும் வழிபாடுகள் தொடர்கின்ற நிலையில் அங்கு தங்கியிருந்த பக்தர்கள் இன்றிரவு தாக்கப்பட்டுள்ளனர்.ஆறு பக்தர்கள் இதுவரை கைதாகியுள்ளனர்.
வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி வழிபாடுகளை மேற்கொள்ளச்சென்ற பக்தர்களுக்கு இலங்கை காவல்துறையால் இன்று நாள் முழுவதும் பல்வேறு கெடுபிடிகள் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது கைது செய்யவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொல்லியல் அடையாளப்படுத்தப்பட்ட பிரதேமெனவும் மலை தொல்லியல் திணைக்களத்துக்கு சொந்தமானது எனவும் கூறி காவல்துறையினர் வாதிட்டுவருகின்றனர்.
அதேவேளை கலகத் தடுப்பு பிரிவினர்,அதிரடிப்படையினர் தொடர்ந்தும் குவிக்கப்பட்டேயுள்ளனர்.
இதனிடையே வெடுக்குநாறி ஆலய பூசகர் உட்பட நிர்வாகசபை உறுப்பினர் இருவரும் வவுனியா நீதவான் நீதமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சிவராத்திரி பூஜைக்கான ஒழுங்கமைப்பில் ஈடுபட்டிருந்த வவுனியா வெடுக்குநாறி ஆலய பூசகர் உட்பட நிர்வாகசபை உறுப்பினர் ஒருவருமாக இருவர் நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர்.
எனினும் வவுனியா வெடுக்குநாறிமலையினை சுற்றி காவல்துறையால் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டநிலையில் 5 கிலோமீற்றர் தூரம் நடந்துசென்று, பொதுமக்கள் ஆலய தரிசனத்தை முன்னெடுத்தனர்.
இதேவேளை மகாசிவராத்திரி வழிபாட்டிற்காக தூர இடங்களில் இருந்து வருகைதந்த பொதுமக்கள், உள்ளே செல்லமுடியாதவாறு பிரதான வீதியில் தரித்து நின்றிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், செல்வராசா கஜேந்திரன், வேலன் சுவாமிகள்,துரைராசா ரவிகரன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்ததுடன் நடந்து சென்று ஆலயத்தில் வழிபாட்டிலும் ஈடுபட்டனர்.
இதேவேளை குருந்தூர்மலை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள விகாரைகளில் இருந்து பௌத்த மதகுருக்களும் சிங்கள மக்களும் வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment