நீதிக்கான பயணம் தொடரும்!
சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் முன்னெடுத்துவரும் தொடர்போராட்டத்தின் 2209 ஆவது நாளினை முன்னிட்டும் முல்லைத்தீவு நகர சுற்றுவட்ட பாதையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கங்களால் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் கலந்து கொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க பிரதிநிதிகள் இலங்கையில் யார் ஜனாதிபதியாக வந்தாலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிவேண்டிய போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். இதுவரை நான்கு ஜனாதிபதிகள்; இலங்கையினை ஆட்சிசெய்த காலம் தொடக்கம் நீதிக்கான போராட்டத்தில் தாம் சமரசமின்றி தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.
மகிந்த ராஜபக்ச போரினை நடத்தினார். இனத்தினை அழித்தார். எங்கள் உறவுகளை காணாமல் போக செய்தார் அதன்பின்னர் மைத்திரிபாலசிறிசேன வந்தார். அதன்பின்னர் கோட்டபாய ராஜபக்ச வந்தார் .அதன் பின்னர் மக்களின் ஆணையினை பெறாத ரணில் விக்ரமசிங்க வந்தார்.
இலங்கையில் அடுத்தடுத்து புதிய ஜனாதிபதிகள் வருகின்றார்கள் ஆட்சிகள் மாறுகின்றன.
ஆனால் தமிழ்மக்களுக்கான எந்த தீர்வும் எட்டாத பொழுதும்; பல புதிய புதிய சட்டங்களை கொண்டுவந்து தமிழ்மக்களை அடக்கிக்கொண்டிருக்கின்றார்கள். தற்போது ஜனாதிபதி தேர்தல் வரப்போவதாக சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். எத்தனை ஜனாதிபதிகள்; வந்தாலும் ஆட்சி மாறினாலும் தமிழர்களுக்கு எந்த ஒரு தீர்வும் கிடைக்கப்பெறாது என்பதை தமிழ்மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள் ஜனாதிபதி தேர்தல் என்பது அவர்கள் தங்கள் ஆட்சிகளை பிடிப்பதற்காக இன்று ஓடிக்கொண்டிருக்கின்றார்கள் .
யார் வந்தாலும் எங்களுக்கு கவலையில்லை நாங்கள் சர்வதேசத்தினை நோக்கியே நீதிக்கான பயணம் தொடரும் என்று வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவிகள் தெரிவித்துள்ளார்கள்.
Post a Comment