போராட்டம் தொடரும்!
இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை சுரண்டுவதை தடுக்கும் வகையில் இந்திய எல்லைக்குள் நுழைந்து போராட்டம் நடத்த தயாராக இருப்பதாக வடமாகாண மீனவர்கள் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை கடல் எல்லைக்குள் அதிகரித்துள்ள இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டிக்கும் வகையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் சுழிபுரம் மேற்கு அலைமகள் கடற்றொழிலாளர்கள், சவுக்கடி கடற்பரப்பில் இருந்து இலங்கை எல்லைவரை சென்று கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 20 படகுகளில்,உள்ளுர் மீனவர்கள் கறுப்பு கொடிகளை படகில் கட்டியவாறு கடலில் சுமார் 30 நிமிடங்கள் வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சவுக்கடியிலுள்ள இலங்கை கடற்படை முகாம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்திய எல்லைக்குள் நுழைந்து போராட்டம் நடத்தப் போவதாக மீன்பிடி சமாசங்களின் தலைவர் அன்னராசா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யுhழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் அத்துமீறிய இந்திய கடற்தொழிலாளர்களை கட்டுப்படுத்துமாறு கோரி பல போராட்டங்களை முன்னெடுத்தோம். ஆனால் தொடர்ந்தும் அவர்களது வருகை இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் எமது எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளிப்படுத்தும் முகமாக கடல் வழியாக இலங்கை எல்லை வரை எமது கருப்புக் கொடிப் போராட்டத்தை முன்னெடுத்தோம்.
இந்தப் போராட்டம் ஒரு ஆரம்பப் போராட்டமாகவே பார்க்கிறோம். ஏனெனில் நாம் எமது கடல் எல்லை வரை போராட்டத்தை முன்னெடுத்தோம் இந்திய எல்லைக்குச் செல்லவில்லை.
இந்தியா எல்லைக்கு செல்வோமாயின் என்ன நடக்கும் என்பதும் எமக்குத் தெரியும். அது பற்றி நாம் கவலைப்பட மாட்டோம். உயிரச்சுறுத்தல் வந்தாலும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கின்றோமெனவும் அன்னராசா எச்சரித்துள்ளார்.
Post a Comment