தமிழக கடற்தொழிலாளர்கள் மூவருக்கு சிறைத்தண்டனை


இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 36 தமிழக கடற்தொழிலாளர்ககளில் மூவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் , ஏனைய 33 பேருக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

  நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த 15 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 15  தமிழக கடற்தொழிலாளர்களும், 17ஆம் திகதி கைது செய்யப்பட்ட 21 கடற்தொழிலாளர்களினதும் வழக்கு விசாரணை  ஊர்காவற்றுறை நீதவான் முன்னிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன் போது , 36 தமிழக கடற்தொழிலாளர்களும் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் ஏற்றுக்கொண்டனர். 

அதனை அடுத்து , அவர்களில் இரண்டு படகோட்டிகளுக்கும்  06 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அதேவேளை மற்றுமொரு கடற்தொழிலாளிக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் , அத்துமீறி நுழைந்தமையால்  ,அவருக்கு 1 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 

அத்துடன் ஏனைய 33 கடற்தொழிலாளர்களுக்கும் 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அதனை 05 வருடங்களுக்கு ஒத்திவைத்த நீதவான் , கைப்பற்றப்பட்ட படகுகளில் ஒரு படகின் உரிமையாளர் கைது செய்யப்பட்டவர்களுக்குள் இருந்தமையால் , அந்த படகினை அரசுடைமையாக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். 

ஏனைய இரு படகுகளுக்கான விசாரணைகளுக்காக வழக்கு திகதியிடப்பட்டுள்ளது. 


No comments