மன்னார் தீவில் ஏற்படவுள்ள அழிவு? மன்னார் பிரஜைகள் குழு விளக்கம்!


மன்னார் தீவில் ஏற்படவுள்ள மிகப்பெரிய அழிவுக்கு அரசு சம்பந்தப்படுகிறதா என்கின்ற சந்தேகம் மக்கள் மத்தியிலும், எங்கள் மத்தியிலும் எழுந்துள்ளது என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.

மன்னார் பிரஜைகள் குழுவில் இன்று சனிக்கிழமை (9) பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மன்னார் தீவு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகிறது. அவற்றில் முக்கியமாக பாரிய மண் அகழ்வுத் திட்டம் மற்றும் எல்லை மீறிய காற்றாலை கோபுரங்கள் மற்றும் காடழிப்பு போன்றவை  காணப்படுகின்றன.

எனினும், மண் அகழ்வு தொடர்பாக பல்வேறு விடயங்களை முன்வைக்க விரும்புகின்றோம். மண் அகழ்வில் ஈடுபடுகின்ற தொழிற்சாலைகள் சம்பந்தமாக விழிப்புணர்வுகள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

குறிப்பாக, மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிவதற்காக அரச தரப்பில் பல்வேறு முயற்சிகளை கடந்த வருடம் நாங்கள் மேற்கொண்டுள்ளோம். ஆனால், அரச தரப்பிடம் இருந்து இதுவரை எந்த விதமான பதில்களும் எமக்கு கிடைக்கவில்லை.

பல ஆண்டுகளாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் இவ்விடயம் தொடர்பாக வினவியபோதும், விளக்கம் கோரியபோதும் எவ்வித பதிலும் எமக்கு கிடைக்கவில்லை.

மேலும், மன்னார் பிரதேச செயலகத்திடமும் நாங்கள் பல்வேறு விதமான விளக்கங்களை கேட்டிருந்தபோதும் எவ்வித பதிலும் எமக்கு வழங்கப்படவில்லை.

இவ்விடயம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஊடாக நாங்கள் தகவல்களை பெற்றுக்கொள்ள அரசை நாடினோம். விளக்கம் கோரி பல்வேறு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை அனுப்பப்பட்ட விண்ணப்பங்களுக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.

மிகப் பெரிய அழிவுக்கு அரசும் சம்பந்தப்படுகிறதா என்கின்ற சந்தேகம் மக்கள் மத்தியிலும், எங்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. அவற்றை தெளிவாக நாங்கள் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். 

29.12.2021 அன்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இதற்காக விளக்கம் கேட்டு, நாங்கள் எழுதியிருந்தோம். அதற்கான பதிலை 10.01.2022 அன்று வழங்கியிருந்தார்கள். கோரிய விளக்கங்களை வழங்குவதாக  தெரிவித்திருந்தனர். ஆனால், எவ்வித பதிலும் இல்லை.

தொடர்ந்தும் பல தடவைகள் விளக்கம் கோரி கடிதம் எழுதியிருந்தோம். எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இவ்வாறான நடவடிக்கைகள் எமக்கு கவலையளிக்கின்றன. மன்னாரை மிகவும் ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்கின்றனர்.

அரசிடம் பல்வேறு முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டுள்ளபோதும் அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துகிறோம் என தெரிவித்தார்.

No comments