ஒருபுறம் வெள்ளையடிப்பு:மறுபுறம் விசாரணை!
புலம்பெயர் தேசத்தின் தமிழ் தரப்புக்கள் பேரில் ஆட்சியாளர்களிற்கு வெள்ளையடிப்பது ஒருபுறம் தொடர மறுபுறம் கைதுகள் மற்றும் விசாரணைகள் மும்முரமடைந்துள்ளது.
ஏற்கனவே மாவீரர் தின நினைவேந்தல்களில் முன்னின்று செயற்பட்ட முன்னாள் போராளிகள் கிளைமோர்களை தயாரித்ததாக கைதாகிவருகின்றனர்.இதுவரை 17இற்கும் அதிகமான தமிழ் பொதுமக்கள் இலங்கை அரசின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகியுள்ளனர்.
இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இன்று விசாரணைக்குள்ளாகியுள்ளார்.
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவரும் உதயன் நாளழதழின் ஊடகவியலாளருமான இராசரத்தினம் தர்சனிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் யாழ்.அலுவலகத்தில் வைத்து சுமார் 04 மணித்தியாலங்களுக்கும் மேலாக விசாரணை நடாத்தியுள்ளனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முன்னெடுத்தபோது புரட்சிப் பாடல் இசைக்கப்பட்டமை தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.அத்துடன் மாணவர் ஒன்றிய செயற்பாடுகள், மாணவர் ஒன்றியம் நடத்திய ஊடக சந்திப்புகள் தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment