வடமராட்சி சாதனை:7000பேருக்கு ஒரு பார்?
நெல்லியடி பிரதேசத்தில் மற்றுமொரு மதுபானசாலைகான அனுமதி வழங்கப்படுவது தொடர்பில் அரச அமைச்சர் மற்றும் பிரதேசசெயலக மற்றும் பிரதேசசபை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக வடமராட்சியில் 7000 பேருக்கொன்று என்ற வகையில் மதுபானச்சாலை உள்ளதாக கணக்கப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே நெல்லியடி சந்தை வியாபாரிகளால் வடமாகாண ஆளுநர், யாழ்மாவட்ட அரசாங்க அதிபர், மதுவரித் திணைக்கள அதிகாரி, கரவெட்டி பிரதேச சபை செயலாளர் போன்றோரிடம் மதுபான சாலைவேண்டாமென வேண்டுகோள் விடுக்கப்பட்டள்ளது.
நெல்லியடி நகர் பகுதியில் நெல்லியடி புதிய சந்தைக்கு அருகாமையில் மற்றுமொரு மதுபானசாலைகான அனுமதி வழங்கப்படுகின்றமை தொடர்பில் நெல்லியடி சந்தை வியாபாரிகளாகிய நாம் கடும் எதிர்ப்பினை பதிவுசெய்கிறோம்.
ஏற்கனவே நெல்லியடி நகர் பகுதியில், நெல்லியடி சந்தைக்கு மிக அருகில் அனுமதி வழங்கப்பட்ட மதுபானசாலை இயங்கிய காலப்பகுதியில் மதுபான பாவனையாளர்களின் விரும்பதாக செயற்பாடுகள் மூலம் எமது சந்தை வியாபார நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தது. அதேபோல சந்தைக்கு வரும் பெண்கள் மீது பாலியல் ரீதியான சீண்டல்கள் மேற்கொள்ளப்படுவதுடன் பெண்களை அவமதிக்கும் வகை ஆபாசமாக பேசுதல் போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தேறியுள்ளது. தனிப்பட்ட பிரச்சனைகள் கடந்த சில மாதங்களாக அங்கிருந்த மதுபானசாலை அகற்றப்பட்ட பின்னர் மேற்படி அசௌகரியங்கள் ஏற்படாமல் இருந்தது.
மேற்படி மதுபானசாலை இருந்த காலத்தில் சந்தையில் ஏற்பட்ட விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்பாக, கடிதங்கள் மூலமாக பிரதேச சபைக்கும் முறைப்பாடுகள் மூலம் காவல் துறைக்கு அறிவிக்கபட்டு உள்ளது. இவ்வாறான நிலையில் மீண்டும் நெல்லியடி நகர் பகுதியில் மதுபானசாலைக்கு அனுமதி கோரப்பட்டதாக செய்தி கிடைத்தது மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளோம்.
புதிதாக மதுபானசாலைக்கான அனுமதி வழங்கப்படுமாயின் மேலும் வியாபாரத்திற்கு அசௌகரியங்கள் ஏற்படும் ஆகையால் நெல்லியடி நகர் பகுதியில் புதிதாக எந்தவொரு மதுபானசாலைக்கான அனுமதி பத்திரங்களையும் வழங்க வேண்டாம் என கேட்டு நிற்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நெல்லியடி வர்த்தக சங்கத்தினரிடம் தொடர்புகொண்டு கேட்ட போது குறித்த மதுபானசாலை திறப்பதற்கு தாமும் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
Post a Comment