மீட்பு: 26 தாண்டியது!



முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு இன்றையதினம்(23) நான்காவது நாளாக தொடர்ந்து நடைபெற்றிருந்த நிலையில் இதுவரையில் மொத்தமாக 26 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நாளை விசேட கருவி மூலம் சோதனை நடைபெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார்.

நான்காவது நாளாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணியில், இன்று மூன்று மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும் இரண்டு எலும்புக்கூடுகள் பகுதியளவிலும் மீட்கப்பட்டுள்ளன.

இதனுடன் துப்பாக்கிச் சன்னங்கள் மற்றும் இலக்கத் தகடுகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இன்று முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவா, தடயவியல் காவல்துறை அதிகாரிகள், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நாளைய தினம் விசேட கருவி மூலம் மனிதப் புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்துள்ளது என்பதை அறியும் வகையில் சோதனை நடத்தப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விசேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார்.


No comments