யாழில் சட்டவிரோதமாக கூட்டம் கூட்டி பிறந்தநாளை கொண்டாடியவர் விளக்கமறியலில்!


யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக கூட்டம் கூட்டி பிறந்தநாளை கொண்டாடிய , பிறந்தநாளுக்கு உரிய பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரின் விசேட நடவடிக்கையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட நபரை விசாரணைக்கு பின்னர், நேற்றைய தினம் யாழ்.நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்திய போது , சந்தேகநபரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் , யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து , அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக, 50க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடி தங்களில் ஒருவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

அதனை டிக்டொக் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் உள்ளனர்.

பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களின் செயற்பாடானது வீதியில் சென்ற மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்ததாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு தொலைபேசி ஊடாக அறிவிக்கப்பட்ட போதிலும் பொலிஸார் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை.

யாழ்.நகர் மத்தியில் சன நெருக்கடியான நேரத்தில் சட்டவிரோதமான முறையில் ஒன்று கூடி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்கள் அது தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்காதமை தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்து இருந்தனர்.

அதனை அடுத்து சட்டவிரோதமான முறையில் கூட்டம் கூடி பிறந்தநாள் கொண்டாடி , மக்களின் இயல்பு வாழ்வுக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்க்ளை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இது வரையில் பிறந்தநாளுக்கு உரிய நபர் , பிறந்தநாளை ஏற்பாடு செய்த இருவர் உள்ளிட்ட 08 பேர் கைது செய்யப்பட்டு யாழ்.நீதவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

No comments