13:சிங்கள மக்களிற்கு ஆறுதல் சொல்லும் பிள்ளையான்!



13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில், வடக்கு மற்றும் கிழக்கை பிரதிநிதித்துவப் படுத்தும் மக்கள் பிரதிநிதிகளைப் போன்றே தெற்கில் உள்ள கடும்போக்குவாத சில சிங்களத் தலைவர்கள் வெளியிடும் தீவிரக் கருத்துக்களால் தெற்கில் உள்ள சிங்கள மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை என்று அரச  அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த முயற்சி எடுத்து வருகின்றார். நாடாளுமன்றத்தில் வடக்கு மற்றும் கிழக்கு, மக்கள் பிரதிநிதிகளிடம் 13 ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவது குறித்து கருத்துக்களைக் கேட்டறிந்தார். 

அண்மையில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அனைத்து கட்சிகளையும் அழைத்து சர்வகட்சி மாநாடு ஒன்றையும் நடத்தினார். ராஜீவ் – ஜே. ஆர் ஜயவர்தன ஆகியோர் அன்று 13 ஆவது திருத்த சட்டமூலத்தை கொண்டுவந்தபோது அன்றைய அமைச்சரவையில் ஒரு அமைச்சராக அங்கம் வகித்த தற்போதைய ஜனாதிபதி, இந்த அதிகாரப் பகிர்வுப் பிரச்சினைக்கு நிரந்தமான தீர்வை முன்வைப்பார் என்று எனக்கு நம்பிகை இருக்கின்றது.” என்றும் அரச அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதிகாரப் பகிர்வின் மூலம் நாடு துண்டாடப்படும் என்று தெற்கில் உள்ள அரசியல் தலைவர்கள் கருத்துக்களை வெளியிடும் அதே நேரம், முதலில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறும், எமக்கு முழுமையான அதிகாரப் பகிர்வு மாத்திரமே வேண்டும் என்றும் வடக்கு, கிழக்கு அரசியல் தலைவர்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர். இவை இரண்டுமே இரு தீவிர நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது என்றும் அமைச்சர் குறிப்பிடடுள்ளார். 

13ஆவது அரசியலமைப்பை அமுல்படுத்துவதில் மிதமான போக்குடன் இருதரப்பும் சுமூகமான கலந்துரையாடல்களை நடத்தி இப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதே இந்நாட்டின் முன்னேற்றத்துக்கு உகந்தது என்றும் தெரிவித்தார். 

13ஆவது அரசியலமைப்பின் ஊடாக வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் உள்ளார். ஆனால் காவல்துறை அதிகாரத்தைப் பகிர்வதில் மட்டும் சில சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றுக்கும் தீர்வுகாண முடியும் என்று ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கை பிரதிநிதித்துவப் படுத்தும் மக்கள் பிரதிநிதிகளைப் போன்றே தெற்கில் உள்ள கடும்போக்குவாத சில சிங்களத் தலைவர்கள் வெளியிடும் தீவிரக் கருத்துக்களால் தெற்கில் உள்ள சிங்கள மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை என்றும் அவை பெரும்பாலும் அரசியல் நோக்கங்களில் கூறப்படலாம் என்றும் குறிப்பிட்ட அமைச்சர், இரு தரப்பும் பரஸ்பர புரிந்துணர்வுடன் நம்பிக்கை வைத்து செயற்படுவதன் மூலமே இப்பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார். அவ்வாறான நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு ஊடகங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பி;ள்ளையான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


No comments