யாழில். மதுபான சாலை , கடையை உடைத்து மதுபானம் , சிகரெட்டை திருட்டு - முதியவர் கைது


யாழ்ப்பாணத்தில் மதுபான சாலையை உடைத்து மதுபானங்களை திருடியதுடன் , கடை ஒன்றினை உடைத்து 3 இலட்ச ரூபாய் பணம் மற்றும் ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான சிகரெட் என்பவற்றை திருடிய குற்றச்சாட்டில் 63 வயதான முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்.நகர் பகுதியில் உள்ள மதுபான சாலை ஒன்றினை உடைத்து மதுபானங்கள் திருடப்பட்டன. மறுநாள் நாள் கடை ஒன்றின் கூரையை பிரித்து இறங்கி கடைக்குள் இருந்த 03 இலட்ச ரூபாய் பணம் மற்றும் ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான சிகரெட் என்பன திருடப்பட்டன. 

குறித்த இரு திருட்டு சம்பவங்கள் தொடர்பிலும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில் அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து இருந்தனர். 

இந்நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு , பை ஒன்றுடன் சந்தேகத்திற்கு இடமான முறையில் யாழ்,நகர் பகுதியை அண்மித்த பகுதியில் நடமாடிய முதியவரை பொலிஸார் மறித்து சோதனையிட்டனர். 

அதன் போது பைக்குள் இருந்து , சுத்தியல் , சாவிகள் என்பவற்றை மீட்ட நிலையில் அவரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை யாழ்.நகர் பகுதியில் மதுபான சாலை மற்றும் கடையை உடைத்து திருடியவர் என பொலிஸார் கண்டறிந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

No comments