குருந்தூர்மலைக்கு பிரிகேடியர் சரத்வீரசேகரவும் வந்தார்!



முல்லைத்தீவு குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்தவிகாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதான குற்றச்சாட்டுக்கள் மத்தியில் நீதிபதி நேரில் விகாரைப்பகுதிக்கு பயணித்துள்ளார்.

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தினர் சார்பில் கடந்த மார்ச் மாதம் நீதிமன்றில்  முறையீடு செய்யப்பட்ட  வழக்கு இரண்டாவது தடவையாக    முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்போது முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா  குருந்தூர் மலைக்குச் சென்று நிலமைகளை கள ஆய்விற்கு உட்படுத்தியுள்ளார்.

முன்னர் இருந்த சூழ்நிலையினை அப்பகுதியில் பேண வேண்டும் என்று நீதிமன்றம் வழங்கிய கட்டளையினை மீறி அந்த இடத்தில் மேம்படுத்தல் வேலைகள் செய்யப்பட்டுள்ளதை ஆதாரத்துடன் நிருப்பித்துள்ளதாக ஆதிசிவன் ஜயனார் ஆலயம் சார்பான சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பதில் அறிக்கை வழங்குவதற்காக இலங்கை காவல்துறைக்;கும் தொல்லியல் திணைக்கத்துக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது 

ஏதிர்வரும் ஆகஸ்ட் 8ம் திகதியன்று  அறிக்கையினை மன்றில் தாக்கல் செய்ய திகதியிடப்பட்டுள்ளது அறிக்கையின் பிற்பாடு அதுதொடர்பிலான கட்டளை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றினால் வழங்கப்படும் என தெரியவருகின்றது.

குருந்தூர் மலையில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன்,மற்றும் முன்னாள வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் பொதுமக்கள் என பலர் பிரசன்னமாகியிருந்தார்கள்.

தொல்பொருள் திணைக்கள பதில் பணிப்பாளர் உள்ளிட்ட அரச சட்டத்தரணிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரியல் அட்மிரல் சரத்வீரசேகர மற்றும் பௌத்த மதகுருமார்கள் பெரும்பான்னை மக்கள் என பலர் குருந்தூர் மலையில் பிரச்சனமாகி  இருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments