ஒருவருடம்:கொண்டாட்டம் தேவையில்லை



ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்று எதிர்வரும் 21ஆம் திகதியுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது.

தனது பதவியேற்பு விழாவிற்காக எந்தவொரு விழாவையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் பதவியேற்பு விழாக்களை ஏற்பாடு செய்வது தொடர்பில் பல தரப்பினரும் முன்வைத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி இந்த பணிப்புரைகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜூலை மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 134 வாக்குகளைப் பெற்று ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்று, ஜூலை 21 ஆம் திகதி நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாக பதவியேற்றார்.

நாட்டில் நிலவிய அராஜகத்திலிருந்து வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் பதவியேற்பு விழாவொன்றை ஏற்பாடு செய்ய வேண்டுமென அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் விசுவாசமான கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

எவ்வாறாயினும், பதவியேற்பு விழாவை ஏற்பாடு செய்வதற்கு பொதுப் பணத்தையோ அல்லது தனியார் பணத்தையோ செலவிட வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி பதிலளித்துள்ளார்.



இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற நாளான எதிர்வரும் 21ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ளார்.

No comments