நிதானம் இழந்து மாணவியை தாக்கி விட்டேன் - அதிபர் மன்றில் தெரிவிப்பு


நிதானம் தவறியமையால் மாணவியை தாக்கி விட்டேன் என அதிபர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். 

தீவக வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 09 வயதான மாணவியை பிளாஸ்ரிக் குழாயினால் 20 தடவைகள் தாக்கியதாக பாடசாலை அதிபருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது. 

அதனை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பாடசாலை அதிபர் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , நேற்றைய தினம் திங்கட்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். 

நீதிமன்றில் நடைபெற்ற விசாரணைகளின் போது , பாடசாலையில் மேலதிக வகுப்பு நடாத்தியதாகவும் , அதன் போது , ஒரு விடயத்தை மூன்று தரம் விளங்கப்படுத்தியும் மாணவியால் விளங்கிக்கொள்ள முடியாது, தவறிழைத்தமையால் , நிதானம் இழந்து , மாணவியை அடித்தேன் என மன்றில் கூறினார். 

அதனை அடுத்து , நிதானம் இழப்பதும் ஒரு வகை நோயே , அதற்கு உளவியல் சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்திய நீதவான் , 05 இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல அதிபரை அனுமதித்து, வழக்கினை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். 

அதேவேளை , மாணவியை தாக்கிய அன்றைய தினம் ,குறித்த மாணவி உள்ளிட்ட 09 மாணவிகளை அதிபர் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

No comments