நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய கொடியேற்றம் திங்கட்கிழமை


யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் நாளை மறுதினம் திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெற்று ஜுலை 04ஆம் திகதி தெப்போற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது.

இந்நிலையில் , மகோற்சவ திருவிழா ஏற்பாடுகள் தொடர்பில் ஆலய அறங்காவலர் சபை தலைவர் கந்தசாமி பரமலிங்கம் தெரிவிக்கையில்,

நயினாதீவில் தற்காலிக பொலிஸ் நிலையம் அமைக்கப்படவுள்ளதுடன் பயணிகளின் நலன்கருதி படகு மற்றும் பேருந்து சேவைகளும் அதிகளவில் இடம்பெறவுள்ளது.

ஆலயத்திற்கு வரும் அனைவரும் ஆசாரசீலர்களாக வருகை தருதல் வேண்டும். ஆலய மற்றும் உள்வீதியில் தொலைபேசிப் பாவனை புகைப்படங்கள், ஒளிப்பதிவுகள் செய்தல் என்பன முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே இவற்றினைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும்.

ஆலய வளாகத்தில் பாதணிகளுடன் செல்லுதல் மற்றும் உலாவுதல் ஆகாது. அடியார்கள் ஆபரணங்கள் அணிந்து வருவதை தவிர்ப்பது நல்லது.

ஆலயத்திற்கு வருகை தரும் பெண்கள் தமிழ்ப்பண்பாட்டு கலாசார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆண்கள் மேற்சட்டை அணிந்து ஆலயத்தினுள்ளும் புறமும் வருதல் தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும், கடற்போக்குவரத்தில் ஈடுபடும் படகுகள் தரச் சான்றிதழை கட்டாயம் பெற்றுக்கொள்வதுடன், படகில் ஏற்றிச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையையும் உறுதிப்படுத்துவதுடன் தாழ்வுப்படகுகள் ஏணிப்படி வசதி அமைத்தலை உறுதிப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவை, பொலிஸ் பாதுகாப்பு மற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான தங்குமிட வசதிகள் , போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவோரை கைது செய்தல், கடற்போக்குவரத்தில் பாதுகாப்பு அங்கிகளை அணிவதை உறுதிப்படுத்தல்,பாடசாலை மாணவர்களின் சாரணர் தொண்டர் சேவை, கடற்போக்குவரத்து நேரத்திற்கமைய தரைப்போக்குவரத்தை ஏற்படுத்தல், வாகனத்தரிப்பிடம், படகுகளில் பயணிகளுக்குரிய வசதிகள் இல்லாத படகுகளை சேவையில் ஈடுபடுவதை தவிர்த்தல், தரை மற்றும் கடற்போக்குவரத்து நேரஅட்டவணையை காட்சிப்படுத்தல், மின்இணைப்பு , படகுகளில் மோட்டாா் வாகனங்களை ஏற்றும்போது பிரதேசசெயலரிடம் அனுமதி பெறல், யாசகம் பெறுவோர் உள்வருவதை தடுத்தல் தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மேலும் கடைகளுக்கு பிரதேச சபையின் அனுமதி, நடமாடும் வைத்திய சேவை ,சுகாதாரம், மற்றும் குடிநீர் தேவை, மின்சாரத்தேவை, அமுதசுரபி அன்னதான ஒழுங்குகள், அம்புலன்ஸ் சேவை மற்றும் புனரமைக்க வேண்டிய வீதிகள் உள்ளிட்ட விடயங்கள் கவனம் செலுத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

No comments