துடுப்பாட்டப் போட்டியில் சட்டத்தரணிகள் அணி வெற்றி


வடக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இடையே சிநேகபூர்வமாக இடம்பெற்ற துடுப்பாட்டப் போட்டியில் சட்டத்தரணிகள் அணி வெற்றி பெற்றது.

இரண்டாவது வருடமாக நாடாத்தப்பட்ட துடுப்பாட்டப் போட்டி இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

35 ஓவர்கள் கொண்ட துடுப்பாட்டப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய வைத்தியர்கள் அணி 34.4 ஓவரில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 226 ஓட்டங்களை எடுத்தனர்.

227 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சட்டத்தரணிகள் அணி 22.3 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறித்த போட்டி யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தினால் இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டது.

கடந்த வருடம் முதல் தடவையாக நாடாத்தப்பட்ட துடுப்பாட்டப் போட்டியிலும் சட்டத்தரணிகள் அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டியில் விருந்தினர்களாக நீதிபதிகள், வைத்திய நிபுணர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்

No comments