தையிட்டி விகாரை அடுத்த மாதம் திறப்பாம்



யாழ். வலிகாமம் வடக்கு - தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை ஜீன் மாதம் திறந்து வைக்கப்படவுள்ளது. அந்தவகையில், எதிர்வரும் பொசன் தினத்தன்று விகாரை திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தையிட்டியில் பொதுமக்களின் காணியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரை இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ளதுடன், விகாரைக்குக் கலசம் அண்மையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விகாரையை அகற்றி தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என இன்றும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றிருந்தது.

இந்தநிலையில், விகாரையை எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி பொசன் தினத்தன்று திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனிடையே தையிட்டிப் போராட்டக்களத்தில் போரட்டம் மேற்கொள்ளும் மக்களை அச்சுறுத்தும் வகையில் அரச புலனாய்வுப்பிரிவினர் நடந்துகொண்டமையால் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களிடம் போராட்டத்தில் ஈடுபட்டால் கடுமையான தண்டனைகளை அனுபவிக்க வேண்டி வரும், போராட்ட களத்திற்கு முன்னே செல்லக்கூடாது என பல்வேறு விடயங்களை கூறி மிரட்டி போராட்டத்தை திசை திருப்ப முயன்றதாக கூறப்படுகின்றது.


No comments