எவ்வாறு இறந்தார்:சந்தேகம்?



மட்டக்களப்பு ஏறாவூர் – மயிலம்பாவெளி வாவியிலிருந்து உருக்குலைந்த நிலையில், கை, கால்கள் அற்ற பொருமிய நிலையில் சடலமொன்று இன்று (16) காலை மீட்கப்பட்டதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.

முதலை கடித்துக் குதறியதனால் சடலம் கை, கால்களற்ற நிலையில் உருக்குலைந்திருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் மட்டக்களப்பு ஈச்சந்தீவு நாவற்காட்டைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய அமரசிங்கம் ஜெயச்சந்திரன் என்ற மீனவரொருவர் என அவரது உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை 4 மணியளவில் ஈச்சந்தீவு துறையடியில் இருந்து தனது தோணியில் வாவிக்குச் சென்று வீடு திரும்பாததால், உறவினர்கள் வாவியில் தேடுதலை மேற்கொண்டனர். எனினும், அவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்தநிலையில், இன்று காலை சடலம் மைலம்பாவெளி வாவியில் மிதப்பதை கண்டதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

சடலம் உடற் கூராய்வுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

No comments