இந்திய மீனவருக்கு 14 மாத கால சிறை!



இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான 12 இந்திய மீனவர்களில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த மாதம் 23 ஆம் திகதி எல்லை தாண்டி அனலைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 12 பேர் இரு படகுகளுடன் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைதானவர்களில்; ஒருவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதாகி நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டிருந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அம்மீனவருக்கே 14 மாத கால சிறைத்தண்டனையை விதித்து ஊர்காவற்றுறை நீதவான் இன்று உத்தரவிட்டார்.

அத்துடன், கைப்பற்றப்பட்ட இரு படகுகளில் ஒரு படகை பறிமுதல் செய்தும் மற்றைய படகின் உரிமையாளர் இன்மையினால் அந்த படகிற்கான உரிமை கோரும் வழக்கினை அடுத்த மாதம் 06 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


No comments