காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு தீர்வு பெற்று தரலாமாம் - புலம்பெயர் அமைப்புக்களை முதலீடு செய்ய வரட்டாமாம்


காணாமல் ஆக்கப்பட்ட தொடர்பில் உருவாக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் மூலம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வும் பெற்றுக் கொடுக்கப்படும் என ஐனாதிபதி செயலக பணிக் குழாமின் தலைவரும், ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசகரமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். 

யாழ்ப்பாணம் வேலணை பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அரிசி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்,

மேலும் தெரிவிக்கையில், 

இலங்கை ராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதோடு, பெரும்பாலான இடங்களில் நெல் உற்பத்தியிலும் ஈடுபடுகின்றார்கள்.

ராணுவத்தினரின் விவசாய திட்டத்தில் பெரும் போக அறுவடையின் பின்னர் தமது செலவுகளை கழித்து விட்டு, மிகுதி நெல்லினை ஏழை மக்களுக்கு வழங்க  தயாராக இருப்பதாக ராணுவ தளபதி ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தார். 

அவர்களுடைய விருப்பத்தின்படி இன்றைய தினம் அது மக்களுக்கு வழங்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்ட யுத்த அழிவுகளுக்கு பின்னர், நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக வேறு பல பிரச்சினைகளுக்கு  முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது. அதாவது கொரோனா நிலை மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டிய ஏற்பட்டது.

அதேபோல் பொதுமக்களால்  மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களுக்கும் நாங்கள் முகம் கொடுக்க வேண்டி இருந்தது. அதேபோல் பொருட்களைக் கொள்வனவு செய்ய வரிசைகளில் நிற்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

அது வடக்கு, கிழக்கு மாத்திரமின்றி தெற்கு மக்கள் என அனைத்து மக்களுக்குமான பிரச்சினையாக காணப்பட்டது.

அந்த நேரத்தில்தான் தற்போதைய ஜனாதிபதி  விக்கிரமசிங்க இந்த நாட்டினை முன்னேற்றுவதற்காக ஐனாதிபதி  பதவியினை பொறுப்பேற்றிருந்தார்

அந்த நேரத்தில் டொலர் பிரச்சனை. அதே போல பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நிதி இல்லை. உல்லாச பயணிகளின் வருகை குறைவடைந்திருந்தது. அதேபோல தொழிற்சாலைகள் இயங்குவதற்கு மின்சாரம் இல்லை. எரிபொருள் இல்லை. அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நிதியில்லை. மருந்து பொருட்கள் வாங்க நிதியில்லை போன்ற பல்வேறுபிரச்சனை அந்த நேரத்தில் காணப்பட்டது.

மக்கள் வாழ்வதற்கு முடியாத ஒரு நிலை காணப்பட்டது. ஆனால் ரணில்  விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்த்து நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டதோடு, மக்களுக்கான பிரச்சினைகளையும் ஒவ்வொன்றாக தீர்க்க நடவடிக்கை எடுத்தார்.

எமது நாட்டைப் போல வேறு பல நாடுகளும், சர்வதேச நாண நிதியத்திடம் பல கோரிக்கைகளை முன்வைத்து,  நிதியினை பெற முடியாத நிலையில் உள்ளார்கள். ஆனால்  ஜனாதிபதி ரணில்  விக்ரமசிங்க அவர்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டு, தற்பொழுது நாடு படிப்படியாக முன்னோக்கிச் செல்கின்றது.

நாங்கள் முன்னோக்கி நகர்கின்றோம். ஒரு அடி ஏனும் பின்னோக்கி செல்ல மாட்டோம், என்ற அடிப்படையில் தற்போது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும்  திட்டத்தில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார்.

அந்த திட்டங்களில் , வட பகுதியில் விவசாயத்தை நவீன மயப்படுத்தி, விவசாயத்தை முன்னேற்றுவது.  அதே போல காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியா நாட்டின் உதவியுடன் அபிவிருத்தி செய்து, வடபகுதியில் சுபிட்சமான நிலை ஏற்படுத்த நாங்கள் முனைகின்றோம்.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட தொடர்பில் உருவாக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் மூலம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வும் பெற்றுக் கொடுக்கப்படும்.

அதேபோல சமுர்த்தி கிடைக்காத குடும்பங்களும் தமக்கு சமுர்த்தி கிடைக்காமை  தொடர்பில் தமது முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும். அதாவது விண்ணப்ப படிவம் ஒன்றினை பூர்த்தி செய்து உரிய அலுவலருக்கு அனுப்புவதன் மூலம்  உரிய முறையில் பெற்றுக் கொள்ள முடியும்.

புலம்பெயர் அமைப்புகள் இலங்கையில் முதலீடுகளை செய்து நாட்டுமக்களின் பொருளாதாரத்தை முன்னேற்ற ஒத்துழைக்குமாறு தற்போதைய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இங்கே முதலீடுகளை மேற்கொண்டு   பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஒத்துழைக்குமாறு நாம் அனைவரும் சேர்ந்து கோரிக்கை விடுக்கிறோம் என்றார் ,


No comments