மட்டக்களப்பு-அவுஸ்திரேலியா :கப்பல் சேவையாம்!

 



மட்டக்களப்பு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் வெளிநாட்டிற்கு செல்வதற்காக வீடு ஒன்றில் தங்கியிருந்த முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 17பேர் கைதாகியுள்ளனர்.அவர்களுள் 3 சிறுவர்கள் 5 பெண்கள் 8 ஆண்கள் மற்றும் அவர்களுக்கு உதவி புரிந்தவர் உட்பட 17 பேரை நேற்றைய தினம் புதன்கிழமை இரவு மட்டக்களப்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். 

மட்டக்களப்பு கொக்குவில் சுவிஸ் கிராமத்திலுள்ள வீடு ஒன்றை நேற்று இரவு  சுற்றிவளைத்து, நடத்தப்பட்ட தேடுதலில் வீட்டில் தங்கியிருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், ஒருவர் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 16 பேரிடம் பணத்தை பெற்று மட்டக்களப்பு கடலில் இருந்து படகு மூலம் அவுஸ்ரோலியாவுக்கு அனுப்புவதாக தெரிவித்துள்ளார். அவர்களை அழைத்து வந்து வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று அங்கு கடந்த ஒரு மாதகாலமாக தங்க வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வெளிநாடு செல்ல முற்பட்டவர்களிற்கு  வீடு வாடகைக்கு பெற்றுக் கொடுத்து உதவி புரிந்து வந்த ஒருவர் உட்பட 17 பேரை கைது செய்ததுடன் படகு மூலம் செல்வதற்காக கொள்வனவு செய்யப்பட்டு வைத்திருந்த உணவுப்பொருட்கள் மற்றும் ஆடைகளையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.


No comments