டென்மார்க் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தமிழ் தரப்புகள் சந்திப்பு.


கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற டென்மார்க் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற புதிய சோசலிச சனநாயக கட்சியின் (Socialdemokratiet) நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும்

டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றிய உறுப்பினர்களுக்கும் இடையில் நட்புரீதியான சந்திப்பு 31.01.2023 அன்று, டென்மார்க் நாடாளுமன்ற வளாகத்தில் இடம் பெற்றது. இச் சந்திப்புகளின் போது தமிழர் தாயகத்தில் தொடர்ந்து நடைபெற்றுவரும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு பற்றியும் அதனால் தமிழ் குமூகத்தில் ஏற்படும் தாக்கங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

சிங்கள அரசு தமிழர் நிலத்தினை ஆக்கிரமித்து தொடர்ச்சியான இனஅழிப்பினை நடாத்தி, தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப் படுகொலைகளிற்கு நீதி வழங்கி, ஈழத்தமிழர்களின் இனப் பிரச்சினையிற்கு தீர்வு எட்டப்பட்டால் மட்டுமே சிங்கள தேசம் பொருளாதார ரீதியான முன்னேற்றத்தினை அடையமுடியும் என்ற யதார்த்தத்தினை தெளிவாக அவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. அத்தோடு அவர்களிடம் தமிழின அழிப்பிற்கு எதிராகவும், நீதி வேண்டியும் டென்மார்க் சார்பாக, ஐ.நாவில் குரல்கொடுக்க வேண்டுமென்ற வேண்டுகோளும் முன்வைக்கப்பட்டது.



No comments