மருத்துவர் சிவரூபனுக்கு வரவேற்பு!



கிளிநொச்சி பளை பிரதேச வைத்தியசாலையில் கடமையிலிருந்தபோது, நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மருத்துவர் சின்னையா சிவரூபன் மக்களது வரவேற்புடன் இன்று புதன்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

பிணையில் விடுதலை செய்யப்பட்ட மருத்துவர் சின்னையா சிவரூபனுக்கு ஏற்கனவே கிளிநொச்சியில் அமோக வரவேற்பு வழங்கப்பட்டிருந்தது. இன்றைய தினம் பளை பிரதேச மக்களாலும், மருத்துவமனை ஊழியர்களாலும் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வைத்தியர் வரவேற்கப்பட்டிருந்தார்.

அதனை தொடர்ந்து தனது கடமைகளை மருத்துவர் சின்னையா சிவரூபன் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னதாக யாழ்.போதனாவைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியாக பணியாற்றியிருந்த சின்னையா சிவருபன் பின்னராக கிளிநொச்சி வைத்தியசாலையிலும் பணியாற்றிருந்தார்.

விடுதலை புலிகள் அமைப்பினை மீள் உருவாக்க முற்பட்டதாக கைதாகியிருந்த சின்னையா சிவருபன் நான்கு வருடங்களின் பின்னராக தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே அவருடன் கைதான முன்னாள் போராளிகள் குற்றச்சாட்டுக்கள் ஏதுமின்றி விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments