காசில்லை:ஒத்திவைப்பு!

 


இலங்கையில் 2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.

ஏதிர்வரும் 22ம் திகதி முதல் தபால் மூல வாக்களிப்பிற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வாக்களிப்பு பிற்போடப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் காவல்துறை முப்படையினருக்கு தேர்தலிற்கு முன்னதாக வாக்களிக்க ஊதுவாக முன்னெடுக்கப்படும் தபால் மூல வாக்களிப்பே பிற்போடப்பட்டுள்ளது.

இதனிடையே வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கான தொகையை செலுத்தாதுவிடின் அவை அச்சிடப்படமாட்டாது என்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு அரசாங்க அச்சகம் எழுத்துபூர்வமாக அறிவித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசாங்க அச்சகத்தின் அறிவிப்பால் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுவதில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்காக 77 கோடி ரூபாயை இந்த மாதத்தில் விடுவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு திறைசேரியிடம் கோரியிருந்தது. ஆனால், 10 கோடி ரூபாயையே தேர்தல் ஆணைக்குழுவுக்கு திறைசேரி விடுவித்தது. இந்நிலையில் அரசாங்க அச்சகத்தின் அறிவிப்பு தேர்தல் திட்டமிட்டபடி நடத்தப்படுவதை கேள்வியாக்கியுள்ளது. இதேவேளை தேர்தலுக்கு ஒத்துழைப்பு தராத நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றை நாடுவோம் என தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments