வியாபாரம் செய்யவருக:மோடி ரணிலுக்கு அழைப்பு

 


இலங்கையின் பொருளாதார மீட்சி மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இந்திய ரூபாவைப் பயன்படுத்தி நாடு இந்தியாவுடனான தனது வர்த்தகத்தை விரிவுபடுத்துவதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

இலங்கை நெருக்கடியின் போது இந்தியா விரைவாகச் செயற்பட்டதாகவும், 3.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை தமது நாட்டுக்கு வழங்கியதாகவும் தூதுவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் 75ஆவது சுதந்திர நிகழ்வு,புதுடில்லியில் இடம்பெற்றபோது, அதில் உரையாற்றிய உயர்ஸ்தானிகர், கொழும்புக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு ரூபே பொறிமுறையைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை தமது நாடு ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.

ரூபே பொறிமுறையைப் பயன்படுத்த தமது நாடு ஆவலுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். ரூபே பொறிமுறையானது, இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு எளிதாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்தியா வருமாறு இந்திய பிரதமர் மோடி முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். எனவே அவர் விரைவில் இந்தியாவுக்கு வருவார் என நம்புவதாக மொரகொட தெரிவித்தார்.

கொழும்பின் பாதுகாப்பு புதுடெல்லியின் பாதுகாப்பு என்றும், இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


யாழ்ப்பாணக் கலாசார நிலையம், இந்தியாவின் முக்கியமான செயற்பாடு என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments