தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் ; இயந்திரத்தையும் பறித்தது!


இந்தியா மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயம் அடைந்த 05 மீனவர்கள் பொறையார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி யை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 21ம் திகதி இரவு அதே பகுதியை சேர்ந்த ஐவர் மற்றும் படகின் உரிமையாளர் கடலுக்கு மீன் பிடிக்க சென்று உள்ளனர்.

நேற்று அதிகாலை தென்கிழக்கு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலையை பறித்துக் கொண்டதுடன் அவர்களை தாக்கியுள்ளனர்.

இதில் ஐந்து மீனவர்கள் காயமடைந்தனர்.

நேற்று கரை திரும்பிய மீனவர்கள் தரங்கம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை மேற்கொண்ட பின் மேல் சிகிச்சைக்காக பொறையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இலங்கை கடற்படையினர் படகில் இருந்த இன்ஜினை பறித்து கொண்டதாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக மீன்வளத் துறையினர் மற்றும் கடலோர காவல் குழும போலீசாரிடம் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

No comments