தமிழ் தரப்புக்களிற்கு தமிழர்பற்றி அக்கறையில்லை





இனத்திற்காக எதையும் நடைமுறைப்படுத்தாது தங்கள் எஜமான்களுக்காக இனத்தையே விற்கக்கூடிய ஒரு கேவலமான நபர்களாகத்தான் இன்றைக்கு கட்சித்தலைவர்கள் என்று கூறி ரணிலுடன் பேச்சுவார்த்தைக்கு சென்றிருக்கிறார்கள் என குற்றஞ்சுமத்தியுள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

தமிழ் மக்களுடைய வாக்குகளையே பெற்று ஆட்சிக்கு வந்து அவர்களுடைய நலனினை கருத்திற்கொள்ளாமல் தங்களுடைய சுய இலாபங்களுக்காகவும் வேறு வேறு தேவைகளுக்காகவும் இனத்தை விற்கின்றவர்களாகத்தான் அவர்கள் இருக்கின்றார்கள்.

ரணில் விக்கிரமசிங்க ஒரு இனவாத கூட்டத்திற்கு கடமைப்பட்டிருக்கிறார் என்பது எல்லோருக்குமே தெரியும். அவர் ஒட்டுமொத்தமாக சிங்கள தேசத்தாலேயே நிராகரிக்கப்பட்டவர். அவருடைய பேச்சுவார்த்தையை நம்பி தமிழினம் சென்று ஒரு விட்டுக்கொடுப்பினை செய்தால் அது ஒரு நிரந்தர விட்டுக்கொடுப்பு.

அதிலிருந்து நாங்கள் மீளவே முடியத அளவிற்குத்தான் நிலைமைகள் இருக்கின்றன. ஆகவே இந்த பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதால் தமிழினத்திற்கு எந்தவிதமான நன்மைகளும் கிடைக்கப்போவதில்லையெனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்

இதனிடையே நேற்றைய தினம் காரை நகரை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் கோட்டாபய கடற்படை முகாம் அமைந்துள்ள பொதுமக்களின் காணிகளை கடற்படைதளத்திற்கென நிரந்தரமாக காணியை சுவீகரிப்பு செய்ய இன்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் வட்டுவாகல் கடற்படை முகாமுக்கு முன்பாக போராட்டத்தில் மக்கள் குதித்திருந்தனர்.எனினும் மக்களது எதிர்ப்பை மீறி கடற்படை வாகனம் ஒன்றில் முல்லைத்தீவு மாவட்டத்தின் அரச அதிகாரிகளை அழைத்துச் சென்ற கொழும்பில் இருந்து வருகை தந்த நில அளவை திணைக்கள அதிகாரிகளால் நில அளவீடு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments