மற்றுமொரு தாயும் நீதி கிட்டாதே பிரிந்தார்



வவுனியாவில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை 15 வருடங்களாக தேடியலைந்த, மற்றுமொரு தாயார் காலமாகியுள்ளார்.

வவுனியா கல்மடு பூம்புகாரைச் சேர்ந்த இ.வள்ளியம்மா (வயது 78) என்பவரே நீண்ட நீதி கோரிய பயணத்தின் மத்தியில் நேற்று காலமாகியுள்ளார்.

இவரது மகன் இராமச்சந்திரன் செந்தூரன் (31வயது) என்பவர் வவுனியா நகருக்கு வழமை போன்று தினக்கூலி வேலைக்குச் சென்ற வேளை 2007 மே மாதம்  கடத்தப்பட்டதாகவும், அவ்வாறு கடத்தப்படும் போது அவருக்கு வயது 16 எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடத்தப்பட்ட தனது மகனை மீட்டுத் தரக்கோரி பல வருடங்களாக போராடிய தாய் இறுதி வரை மகனைக்காணாமலேயே நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளார்.

இதனிடையே கொழும்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாக இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்பது இரா.சம்பந்தனுக்கு எப்படி தெரியும்? அவர் அதை நம்பினால், ஆதாரம் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளை எமக்குக் காட்டவேண்டுமென வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்ப அங்கத்தவர்களது அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.


No comments