மண்டூஸ் சூறாவளி :எச்சரிக்கை!





 மண்டூஸ் சூறாவளி காரணமாக காங்கேசன் துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அலைகள் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றதென எச்சரிக்கப்பட்டுள்ளது.

மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடா ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளுக்கு மீனவ சமூகங்கள் மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காற்று வடக்கு முதல் வடமேற்கு திசையில் வீசும். காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு (40-50) கிலோமீற்றர்களாகவும், அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (65-75) கிலோமீற்றர் வரையிலும் வீசக்கூடும். 

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (30-40) கிலோமீற்றர்களாகவும், அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (50-60) கிலோமீற்றர் வரையிலும் வீசக்கூடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வடக்கினை போன்றே கிழக்கிலும் காலநிலை மாற்றம் காரணமாக பலத்த காற்று வீசுவதோடு, கடல் கொந்தளிப்பாகவும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று வீசுவதால் மாவட்டத்தின் பல பிரதேசங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளது. அத்துடன் கடும் குளிர் காற்றும் வீசுகின்றது.


No comments