மல்லாவியில் சிறுநீரக நோயாளர்களுக்கான இரத்த சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி ஆதார  வைத்தியசாலைக்கு இரண்டு சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்கள் கனடா செந்தில்குமரன் நிவாரண

நிதியத்தினால் இன்று (14-11-2022) வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின்  துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு ஆகிய பகுதிகளில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் நன்மை கருதி விடுக்கபட்ட கோரிக்கைக்கு  அமைவாக  சுமார் ஒரு கோடி 30 லட்சம் ரூபாய் பெறுமதியான    இரண்டு இரத்த சுத்திகரிப்பு  இயந்திரங்கள்  மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு  கனடா செந்தில்குமரன் நிவாரண நிதியத்தினால் இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின்  துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த  சுமார்  500ற்கும்  மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் பயனடையகூடிய வகையில் இவ்விரு இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக மாந்தை கிழக்கு துணுக்காய்  ஆகிய பிரதேசங்களில் உள்ள சிறுநீரக நோயாளர்கள் வாரத்தில் இரண்டு தடவைகள்  இரத்த சுத்திகரிப்புக்காக பெரும் போக்குவரத்து நெருக்கடிகளுக்கு மத்தியில் கிளிநொச்சி பொது வைத்தியசாலை வவுனியா பொது வைத்தியசாலை மற்றும் மன்னர் பொது வைத்தியசாலை ஆகியவற்றுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்ற நிலைமை காணப்படுகிறது

குறித்த சிறுநீரக சிகிச்சைப்பிரிவானது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் திறந்து வைக்கப்பட்ட போதும்  அதன் செயல்பாடுகளுக்கு போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாத நிலையில் குறித்த  கோரிக்கை முன்வைக்கப்பட்டு இவ்வாறு இன்றைய தினம் இந்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன இதனை பயன்படுத்தி சிறுநீரக நோயாளர்கள் சிகிச்சை பெற இலகுவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இலங்கையின் பல பாகங்களிலும்  இருதய நோய் உள்ள நோயாளர்களுக்கும் ஏனைய  நோயால் வாடும் நோயாளிகளுக்கு பலவிதமான மருத்து உதவிகள் மற்றும்  வாழ்வதார திட்டங்கள் ஆகியன தொடர்ச்சியாக  செந்தில்க் குமரன்  நிவாரண நிதியத்தினால் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மல்லாவி பிரதேச வைத்தியசாலையினுடைய பொறுப்பு வைத்திய அதிகாரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செந்தில்குமரன் நிவாரண நிதியத்தின் ஸ்தாபகர் மற்றும்   பாராளு மன்ற உறுப்பினர்  சிவஞானம் சிறீதரன் முன்னாள்  பா.ம.உறுப்பினர் சாந்தி சிறிஸ் கந்தராஜா வைத்திய அதிகாரிகள்  வைத்தியசாலை பதவி நிலை உத்தியோகத்தர்கள் மாவட்ட செயலக அதிகாரிகள் பிரதேச செயலாளர் எனப்பலர் கலந்து கொண்டனர்.

ஜெகதீஸ்வரன் டிஷாந்த் 


No comments