டிசம்பர் 11ஆம் திகதிக்கு பின்னர் அதிகாரப் பரவலாக்கப் பேச்சு - ரணில்


இலங்கையில் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்புகள் நிறைவடைந்த பின்னர், அனைத்து கட்சி கூட்டத்தை அழைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று அவர் இந்த உறுதியை அளித்துள்ளார்.

இதன்படி, டிசம்பர் 11ஆம் திகதிக்கு பின்னர் இது தொடர்பான கூட்டத்தை அழைக்கவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தமது இலக்கின்படி இனப்பிரச்சினைக்கான தீர்வு இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின வருடத்தில் காணப்படவேண்டும்.

இல்லையேல் தீர்வைக் காணுவதற்கு 2048 ஆம் ஆண்டு வரை செல்லவேண்டியிருக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, 1984 ஆம் ஆண்டு முதல் இனப்பிரச்சினை தீர்வுக்கான விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்காக தமிழ் சமூகத்தின் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும். அதேபோன்று சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் நியாயமான அச்சங்கள் போக்கப்படவேண்டும்.

அத்துடன் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் நம்பிக்கையை கட்டியெழுப்பவேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்

இதேவேளை, வடக்கில் காணி விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தாம் நாடாளுமன்றத்தை கலைக்கப்போவதில்லை என்று குறிப்பிட்ட அவர், நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை முடிவடைந்த பின்னர் தேர்தலுக்கு செல்ல முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments