புலிகள் சரணடையவேயில்லையாம்:





இறுதி யுத்த காலப் பகுதியில் இலங்கை இராணுவத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் தகவலறியும் ஆணைக்குழு முன்பாக சாட்சியம் வழங்கியுள்ளது. 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவலறியும் ஆணைக் குழுவிடம் முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு ஒன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இலங்கை இராணுவம் இவ்வாறு சாட்சியம் வழங்கியது. 2019ஆம் ஆண்டும் ‘எங்களிடம் புலிகள் சரணடையவில்லை’ என முன்வைக்கப்பட்ட தகவலறியும் விண்ணப்பத்தை இராணுவம் மறுத்துள்ளது.

 இது தொடர்பான மேன்முறையீடு மூன்று வருடங்களுக்குப் பின்னர் நேற்று பரிசீலிக்கப்பட்டது. ‘யுத்த பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அவர்கள் புலிகளா? பொதுமக்களா? என்பது எமக்கு தெரியாது. நாம் பொறுப்பேற்று கொண்டபோது பதிவுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை. எம்மிடம் வந்தவர்களை பஸ்களில் ஏற்றி புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தின் கட்டுப்பாடுகளில் இருந்த முகாம்களில் சேர்த்தோம். அதன் பின்னர் புனர்வாழ்வு பணியகமே அவர்கள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டனர் எனவும் இராணுவம் சாட்சியம் வழங்கியது. 

ஆனால், மேன்முறையீடு தொடர்பில் ஆணைக்குழுவில் முன்னிலையான சட்டத்தரணி இதனை மறுத்ததோடு இராணுவத்திடம் புலிகள் சரணடைந்தமைக்கான ஆதாரங்களை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்தார். மேலும், புனர்வாழ்வு பணியகத்திடம் இராணுவத்தினம் கூறும் தகவல்கள் இல்லை என, புனர்வாழ்வு பணியகம் வழங்கியுள்ள தகவல்களையும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட ஆணைக்குழு, ‘அரசாங்கமே இந்த விடயங்களை சர்வதேச அமைப்புகளுக்கு பல்வேறு முறை வழங்கி இருக்கிறது. எனவே, 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் இப்போது மறைப்பதற்கு ஒன்றுமில்லை.’ என இராணுவத்துக்கு அறிவித்தது. 

புலிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்தமைக்கான எழுத்துமூல சமர்ப்பணங்களை 10 நாட்களுக்கு இராணுவத்துக்கு விண்ணப்பதாரர் வழங்க வேண்டும். அதுபோல இராணுவமும் எழுத்துமூல சமர்ப்பணங்களை விண்ணப்பதாரருக்கு வழங்கவும் ஆணைக்குழு உத்தரவிட்டது. எதிர்வரும் ஜனவரி 4ஆம் திகதி மனு மீள ஆணைக்குழு முன்பாக விசாரிக்கப்பட உள்ளது.



No comments