குருந்தூர்மலை விவசாரம்:பிணை அனுமதி!



முல்லைத்தீவு - குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறாகச் செயற்பட்டதாகத் தெரிவித்து பௌத்த தேரர்களால் தொடரப்பட்ட வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோரே தலா ஒரு இலட்சம் ரூபாய் ஆட்பிணையில் இன்று விடுதலையாகியுள்ளனர்.

அதேவேளை, வழக்கானது தொடர்விசாரணைகளிற்காக எதிர்வரும் 2023 ஆம் ஆண்டின் மார்ச் 2ம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி, 'கபோக்' கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை நிர்மாணிப்பதற்கும், அங்கு விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமான முயற்சிகள் இடம்பெற்றிருந்தது.

பௌத்த பிக்குகள் மற்றும், பௌத்தாலோக நற்பணிமன்றம், தென்னிலங்கையைச் சார்ந்த பெரும்பாண்மை இனத்தவர்கள், இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து வழிபாட்டு முயற்சிகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி மேற்கொள்ள முயற்சிக்கு எதிர்ப்புத்தெரிவித்து குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் ஜனநாயக ரீதியிலான போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

ஆர்;ப்பாட்டத்தில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன் மற்றும், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

மக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளையை மீறி அன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த நிகழ்வுகள் அனைந்தும் ஏற்பாட்டாளர்களால் கைவிடப்பட்டிருந்தன.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோருக்கு எதிராக மணலாறு சப்புமல்தென்ன ஆராண்ய விகாராதிபதி கல்கமுவ சந்தரபோதி தேரர் உள்ளிட்ட ஏழு தேரர்களால் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், ஜூட் நிக்சன் ஆகியோரை ஆட்பிணையில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் தொடர்புபட்டிருப்பதாக காவல்துறையினர் நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்னர்.


No comments