இந்தியாவின் தரமற்ற இருமல் மருந்துகளால் ஆபிரிக்காவில் 66 குழந்தைகள் பலி!!


மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்தனர். இதற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தரமற்ற 4 இருமல் மருந்துகள் காரணமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், நச்சுத்தன்மை கொண்ட இந்த மருந்துகள் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு வெளியிலும் விநியோகம் செய்யப்பட்டிருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. காம்பியா நாட்டில் ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு மற்றும் 66 குழந்தைகளின் உயிரிழப்பிற்கும் இந்த 4 மருந்துகளுக்கும் தொடர்பிருக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நச்சுத்தன்மை கொண்ட இந்த இருமல் மருந்துகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காம்பியா நாட்டில் ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு மற்றும் 66-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புக்கு இந்த மருந்துடனான தொடர்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள மெய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் என்ற மருந்து நிறுவனத்தால் இந்த 4 இருமல் மற்றும் சளி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைடன் பார்மா எச்சரிக்கை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. அதே நேரத்தில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைவருக்கு அழைப்புகளை ரொய்ட்டர் செய்தி நிறுவனம் மேற்கொண்டபோதும் அதற்குப் பதிலளிக்கப்படவில்லை. காம்பியா மற்றும் இந்தியாவின் சுகாதார அமைச்சகமும் கருத்துக்கான கோரிக்கைக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.

No comments