மட்டக்களப்பில் காணாமல்போனோரின் உறவினர்களிடம் விசாரணை!!

காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள் இன்று (12)புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி

பிரதேச செயலகத்தில் வைத்து காணாமல்போனோரின் உறவினர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இவ்விசாரணையில்  கொழும்பிலிருந்தும், மட்டக்களப்பைச் சேர்ந்த அதிகாரிகள் இதன்போது கலந்து கொண்டு விசாரணைகளை மேற்கொண்டு முறைப்பாடுகளைப் பதிவு செய்தனர்.

இதன்போது காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டு தமது முறைப்பாடுகளைப் பதிவு செய்தனர். 

இந்நிலையில் புதன்கிழமை(12) மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் நடைபெறும் விசாரணைக்கு வருமாறு 75 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், மாவட்டத்தில் மொத்தமாக 450 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள செங்கலடி, மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலகங்களில் 5 நாட்கள் இவ்வாறு காணாமல்போன உறவினர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, முறைப்பாடுகள் பதிவு செய்யப்படவுள்ளதாக இதன்போது கலந்து கொண்டிருந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காணாமல் போனவர்களின் உறவினர்கள் முன்வைக்கும் கோரிக்கைக்கு இணங்க அவர்களுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்வதற்கு காணாமல்போனோர் பற்றிய அலுவலலகம் பரிந்துரை செய்யும் எனவும் இதன்போது குறித்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

மேற்படி பிரதேச செயலகத்தில் 6 பனல்களில் இடம்பெற்ற இம்முறைப்பாட்டுப் பதிவுகளில், அப்பகுதியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு தமது உறவுகள் காணாமல் போனவிடையம் தொடர்பில் தமது முறைப்பாடுகளைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments